"கூறுகிறேன்! கல்யாணம் ஸார், கேளுங்கள்!" என்ற மணி ஆவேசம் வந்தது போல் படபடவென்று பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நடந்தவற்றைச் சொல்லலானார்.
மணி ரொம்பக் காலமாகக் கருணாகரன் வீட்டில் சமையல்காரராக வேலை பார்ப்பவர். கோவர்த்தனனையும் உமாகாந்தனையும் தோளில் தூக்கி வளர்த்தவர். உமாகாந்தன் தன் தகப்பனாருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்றிரவு மணிக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. புரண்டு புரண்டு படுத்தார். நள்ளிரவு சுமாருக்கு ஏதோ அரவம் கேட்க, எழுந்து போய்ப் பார்த்தார். கருணாகரன் பாங்குச் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் தேடிவிட்டு அது காணாமல் பரக்கப் பரக்க ஓடுவதைக் கவனித்தார். உடனேயே அவர் மனமும் கருணாகரன் உள்ளத்தைப் போலவே முதலில் பாங்குச் சாவிக்கும் உமாகாந்தனுக்கும்தான் முடிச்சுப் போட்டது. என்றாலும் ஏதோ சந்தேகம் உதித்தது. கருணாகரன் வாசல் கதவைப் பரபரப்புடன் திறந்து ஓடினாரே தவிர தாழ்ப்பாளை நீக்கவில்லை. ஆகவே அவருக்கு முன்பாகவே யாரோ வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியிருக்கிறார்கள்! யார் அது? மணி கோவர்த்தனன் அறையில் எட்டிப் பார்த்தார். அவனைக் காணோம். வீடு முழுக்கத் தேடினார். எங்கும் அவன் இல்லை. கருணாகரனின் மனைவி, தன் பிள்ளை உமாகாந்தனுக்குக் கடைசியாக ஒரு முறை தன் கையால் சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசைப்பட்டு அவனைத் தன் கணவருக்குத் தெரியாமல் வரச் சொல்லி யிருந்தாள். அவனுக்காகக் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் சாத்தி வைத்து விட்டுச் சமையலறையில் படுத்தவள் இலேசாகக் கண் அயர்ந்துவிட்டாளோ என்னமோ மணிக்குத் தெரியாது. எட்டிப் பார்ப்பதுகூட மரியாதைக் குறைவாக அவருக்குத் தோன்றியது.
கொஞ்ச நேரம் கழித்து வாசல் பக்கமாக வியர்க்க விறுவிறுக்கச் சந்தடியின்றி ஓடிவந்து தன் அறைக்குள் கோவர்த்தனன் நுழைந்து இழுத்துப் போர்த்துக் கொண்டு படுப்பதை மணி பார்த்தார். அவனை உலுக்கி எழுப்பி உட்கார வைத்து, "எங்கே போயிருந்தாய்?" என்று அதட்டலாகக் கேட்டார். கோவரத்தனன் அரண்டு போய்விட்டான். "உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். இன்றிரவு நான் வீட்டைவிட்டு வெளியேறியதாக யாரிடமும் சொல்லாதே" என்று கெஞ்சினான். மேலும் துருவி விசாரித்தபோது கோவர்த்தனனுக்கு உண்மையை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. உமாகாந்தன் தக்க சமயத்தில் வந்து குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு இவனைத் தப்புவித்ததைக் கூறினான்.