தொடர்ந்து சொன்னான். "உமாகாந்தன் எப்படியானாலும் இந்த வீட்டில் இனி அடி எடுத்து வைக்க மாட்டான். அதிலேயே அப்பா மனமுடைந்து போயிருக்கிறார். இப்போது நானும் திருட்டுப் பட்டம் சுமந்து சிறை சென்றால் அப்பாவின் இதயம் வெடித்து விடும். அவரை உயிரோடு கொன்ற பாபத்தைக் கட்டிக் கொள்ளாதே. நான் வீட்டை விட்டு வெளியேறியதை வெளிவிடாதே! எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு!"
மணி மானஸ்தரான கருணாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்தார். ஆனால் எமன் வேறு உருவத்தில் வந்து கருணாகரனை அழைத்துப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனன் கடன்பட்டிருந்த மார்வாடி வந்து அட்டகாசம் செய்தபோது கருணாகரன் படுக்கையில் விழுந்தார். பிறகு அவர் எழுந்திருக்கவே யில்லை.
இந்த நிகழ்ச்சிகளை விவரித்த மணி, கடைசியில் சொன்னார்; "நாலு வருஷங்களாகப் பல்லைக் கடித்துக் கொண்டு இவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன். இன்னும் இரண்டு வருஷங்கள்தான்; உமாகாந்தன் விடுதலை பெற்று வந்துவிடுவான் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கும் தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சற்று முன் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து இவன் மேலும் ஏழெட்டு வருஷம் உமாவுக்குச் சிறைத் தண்டனை கொடுத்துவிட உத்தேசித்திருப்பது தெரிகிறது. இந்தச் சூழ்ச்சியை நான் முறியடித்தே ஆகவேண்டும்."
"கேட்டுக் கொண்டாயா கல்யாணம்?" என்றார் கோவர்த்தனன். இதுவரை உமா காந்தனை விடுவிக்க உனக்கோ பவானிக்கோ சாட்சியமே இல்லாதிருந்தது. இப்போது அது அகப்பட்டு விட்டது" என்று கூறிச் சிரித்தபடியே தமது சட்டைப் பையிலிருந்து இரண்டு உறைகளை எடுத்து மேஜையின் மீது போட்டார். "இவற்றை இன்றே தபாலில் சேர்க்க வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். ஆனால் தபாலுக்கு நேரமாகி விட்டது. உன்னிடம் ஒப்படைக்கிறேன் கல்யாணம், நீயே உரிய அதிகாரிகளிடம் சேர்ப்பித்துவிடு!"
"என்ன இவை?" என்றான் கல்யாணம் திகைப்புடன்.