பவானியோ அவனுக்காகத் தன் இளமையை உணர்ந்திருந்தும் இப்படிச் செய்தான்.யெல்லாம் தியாகம் புரியத் தயாரானாள்.
சிறைத் தண்டனைகளை முழுமையாக அனுபவித்துவிட்டு அவன் திரும்பும்வரை தான் காத்திருக்கத் தீர்மானித்தாள். இந்தத் தியாகப் போட்டியை அறிய வந்தபோது எனக்கு என்னுடைய நீசத்தனத்தின் பயங்கரம் புரிந்தது. அந்தக் காதலர்களைப் பிரித்து வைப்பது மாபாதகம் என்று பட்டது. அதனால்தான் இந்தக் கடிதங்களை எழுதினேன். கல்யாணம்! இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். பவானியிடமும் உமாகாந்தனிடமும் மறக்காமல் சொல்லு! என் மனம் மாறியது உமாகாந்தன் - பவானியின் பரஸ்பரத் தியாகங்களால்தான்; மணி சாட்சியம் கூற முன் வந்ததால் அல்ல."
கல்யாணம் கண் கலங்கக் கனத்த இதயத்துடன் கடிதங்களை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளப் போனான்.
"என் எதிரிலேயே ஒரு முறை படித்துப்பார்த்துவிடு கல்யாணம்; அப்புறம் வேறு உறைகளில் வைத்துக்கொள்ளலாம்" என்றார் கோவர்த்தனன்.
கல்யாணம் உறைகளைக் கிழித்துப் படித்தான். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன இரு கடிதங்களும்.
பாக்கெட்டில் அவற்றை வைத்துக்கொண்டு கோவர்த்தனன் கரங்களைப் பற்றினான் அவன். அவரோ அவனைத் தம் மார்புற இறுகித் தழுவிக்கொண்டார். "கல்யாணம்! நான் உன்னிடம் பல தடவைகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடு" என்றார்.
"ஆகட்டும் ஸார், வருகிறேன்" என்று கூறி விடைபெற்றான் கல்யாணம்.
கோவர்த்தனன், தாரை தாரையாகக் கண்ணீர் உகுத்தபடி நின்ற மணி பக்கம் திரும்பிச் சொன்னார்: "மணி! நான் குடிக்கக் கூடாது என்று அடிக்கடி வற்புறுத்தி வந்தாயல்லவா? நாளை நான் ஜெயிலுக்குப் போனால் எப்படிக் குடிக்க முடியும்? அதனால் திஸ்வில் பி மை லாஸ்ட் டிரிங். இந்தக் கடைசி பானத்தை நீயே உன் கையால் ஊற்றிக் கொடு, பிளீஸ்!" என்றார்.