Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 01 - சரோஜா ராமமூர்த்தி
2.1. கதம்பச் சரம்
மாலை சுமார் நான்கு மணி இருக்கலாம். தோட்டக்காரன் கோபாலன் கூடை நிறைய ஜாதி அரும்புகளையும், கனகாம்பரத்தையும் பறித்து வந்து, கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்த பவானியின் முன்பு வைத்தான். வாழை நாரைத் தொட்டித் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வந்து கொடுத்தான். தூணுக்கு அப்பால் நின்று கொண்டு “அம்மா" என்று கூப்பிட்டுவிட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பவானி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு "என்னப்பா வேணும் உனக்கு?" என்று கேட்டாள்.
”சின்னக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திலேருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு செடிகளுக்கு தண்ணி ஊத்தியாச்சு. மாட்டுக்குத் தீனிவைச்சாச்சு" என்று தன்னுடைய வேலைகள் முடிந்து விட்டதை அறிவித்தான் கோபாலன் .
”சரி உனக்கு என்ன வேணும் என்று சொல்லேன்?" என்று கேட்டாள் பவானி.
கோபாலன் மறுபடியும் தலையைச் சொறிந்நான். ”வீட்டிலே அது சினிமா பார்க்கணும்னு ஒரு வாரமா கேட்டுக்கிட்டு இருக்குது. சாயங்கால ஆட்டத்துக்குப் போகலாம்னு..."
”இருக்கிறயாக்கும்! சரி எதுக்கும் மாடியிலே போய் அம்மாவைக் கேட்டுக்கோ போ..."
இவ்விதம் கூறிவிட்டு, வாழை நாரைக் கிழித்துப் பூ தொடுக்க ஆரம்பித்தாள் பவானி. மாடி அறையிலே அவள் மன்னி கோமதி கோபாலனுக்கு உத்தரவு போடுவது கேட்டது.
"சினிமாவுக்குப் போகிறது இருக்கட்டும், முதலிலே டாக்டர் வீட்டுக்குப் போய் ’இன்றைக்கு என்னாலே அங்கே வரமுடியவில்லை. அவரையே கொஞ்சம் வந்து பார்த்து விட்டுப் போகச் சொன்னாங்க’ என்று சொல்லி விட்டு வா" என்றாள் கோமதி.
அப்புறம் எதையோ நினைத்துக் கொண்டவளாக ”கோபாலா! பூப்பறித்து விட்டாயோ? அம்மாவைக் கேட்டு டாக்டர் தங்கச்சிக்கும் மகளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிப் போய்க் கொடு"