Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 02 - சரோஜா ராமமூர்த்தி
2.2. டாக்டர் ஸ்ரீதரன்
டாக்டர் ஸ்ரீதரனுக்கு இப்பொழுது வயது முப்பத்தி ஐந்து - சென்னை நகரின் பிரபல டாக்டர்களில் அவரும் ஒருவர். மாதம் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வரும்படி வந்தது. மனைவி இறந்து போய் எட்டு வருஷங்கள் ஆகின்றன. மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமா அதை தூண்டி நடத்தி வைப்பவர்களையோ ஒன்றையும் அடையக் கொடுத்து வைக்காதவர் ஸ்ரீதரன். உடன் பிறந்த தங்கையும், மகள் ஜெயஸ்ரீயும் தவிர, அவருடைய லட்சிய மெல்லாம் வைத்தியத் தொழிலில் இருந்தது. அவருடைய அன்பு மனைவி இறந்து போன பிறகு அந்த லட்சியம் வலுப்பெற்றது. அவளை அடியோடு மறந்து விட்டு வேறொருத்தியை மணந்து வாழ விரும்பவில்லை. மண வாழ்க்கையின் சுவையை அவர் நான்கே வருஷங்களில் அனுபவித்து முடித்து விட்டார்.
ஜெயஸ்ரீயின் தாய் பத்மாவுக்கு அழகும் குணமும் ஒருங்கே பொருந்தி இருந்தன. பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டுவந்த சீதனப் பொருள்களில் சுவாமி நாதனும் ஒருவர். பத்மாவுக்குத் துணையாக ஒத்தாசை புரியவந்த அந்தக்கிழவர் பத்மா இவ்வளவு சடுதியில் மறைந்து போவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் போன பிறகு ஒரு தினம் சுவாமிநாதன் தம் மூட்டையை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனைப் பார்க்க வந்தார்.
"என்ன? எங்கே கிளம்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"எனக்கு இங்கே என்ன பாக்கி இருக்கிறது? மகாலட்சுமி மாதிரி இருந்தவள் போய்விட்டாள்!" என்று கண்ணீர் பெருகக் கூறினார் சுவாமி.
ஸ்ரீதரன் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு ”சுவாமி! உமக்கு இங்கேதான் இனிமேல் முக்கியமான வேலைகள் பாக்கி இருக்கின்றன. அவள் போய் விட்டாள். நீரும் போய் விட்டால் இந்தக் குழந்தையை யார் வளர்ப்பார்கள்?"
குழந்தை ஜெயஸ்ரீ விண் விண் என்று தொட்டிலை உதைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பால் புகட்ட வேண்டும். தொட்டிலையும் அதில் கிடந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சுவாமி.