வெளியிலே உலாவ வேண்டும். சிறுசிறு வேலைகள் செய்தாலும் குற்றமில்லை. இப்படிக் காற்றாட வெளியில் போய் விட்டு வருகிறது தானே! நாகராஜன் எங்கே? ஊரில் இல்லையா?" என்று கேட்டார் ஸ்ரீதரன். இப்படிப் பேசிக் கொண்டே ஊசியையும் ஏற்றினார். பச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்குக் கூட அவர் எப்பொழுது குத்தினார் என்பது புரியாமல் போய் விட்டது.
கை அலம்ப வென்னீர் கொண்டு வந்த பவானி அதை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.
பிறகு மெதுவான குரலில். ”இந்த வாரத்தில் இன்னொரு தரம் தலைக்கு ஜலம் விடலாமா? சாப்பாடு பிடிக்க வேயில்லையே. சரியாகவே மன்னி சாப்பிடுகிற தில்லை " என்று கூறினாள்.
ஸ்ரீதரன் கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டே பவானியை ஏறிட்டுப் பார்த்தார்.
’நாகராஜனுக்கு இப்படி ஒரு விதவைத் தங்கையா? வியாபாரத்தில் பணம் ஒன்றையே குறியாக வைத்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகளைக் கூடக் கவனிக்க அவகாசமில்லாமல் திரிபவனுக்கு இப்படி ஒரு உடன் பிறந்தவளா?' என்றுதான் ஆச்சரியம் அடைந்தார் ஸ்ரீதரன்.
"ஓ! தாராளமாய் ஸ்நானம் செய்யலாம். உடம்புக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் ரத்தக் குறைவு. அதுவும் நாளடைவில் சரியாகி விடும்" என்று கூறிவிட்டு "நான் வருகிறேன் அம்மா" என்று சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்று காரில் உட்கார்ந்து காரைச் செலுத்த ஆரம்பித்தார்.
மாடி 'பால்கனி’யில் கை அலம்பிய நீரைக் கீழே மாற்றுவதற்காக வந்த பவானியின் பார்வை, ஸ்ரீதரனின் பார்வையைச் சந்தித்து மீண்டது.
--------------
தொடரும்...