Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 03 - சரோஜா ராமமூர்த்தி
2.3. உடலும் உள்ளமும்
ஒன்றுமில்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்துவது சிலருடைய பிறவிக்குணம். நன்றாக ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; பாலும் பழமும் வெண்ணெயும் ரொட்டியும் சாப்பிடுவார்கள். கன்னத்திலேயும், கண்களிலேயும் ஆரோக்கியத்தின் செம்மை படர்ந்திருக் கும். மகிழ்ச்சி துள்ள வேண்டிய முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டு எனக்கு உடம்பு சரியில்லை, வயிற்றில் வலி. சாப்பாடு பிடிக்கவில்லை. இரண்டு வாய் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுகிறது" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
”போன பிரசவத்தின்போது உடம்பு கெட்டுப் போய் விட்டது. திரும்பவும் தேறவில்லை. குழந்தைக்குக் கூட நான் பால் கொடுப்பதில்லை. 'உடம்புக்கு ஆகாது . பாலை நிறுத்தி விடு' என்று டாக்டர் சொல்லி விட்டார். புட்டிப்பால்தான் கொடுக்கிறேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தாய்மார்கள் அநேகம் பேர் உண்டு. இவர்களைப் பார்த்தால் வியாதியஸ்தர் கள் மாதிரி இருக்க மாட்டார்கள். தாங்கள் பெற்ற மகவுக்குப் பாலூட்டினால் தங்களுடைய அழகு குறைந்து போகும் என்கிற ஒரு வித அசட்டு மனப்பான்மை உடையவர்கள் இவர்கள்.
டாக்டர் ஸ்ரீதரன் சென்ற பிறகு, கோமதி ’உஸ்' என்று கூறிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். "அப்பா அவர் போட்ட ஊசி எப்படி வலிக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு கைகளைத் தடவிக் கொண்டாள்.
பால்கனியை விட்டு வந்த பவானி தன்னுடைய மன்னி படுக்கையில் ஆயாசமாகச் சாய்ந்து இருப்பதைப் பார்த்து அன்புடன் அவள் அருகில் வந்து, ”மன்னீ! ஏதாவது சூடாகச் சாப்பிடுகிறாயா? புதுப் பால் கறந்து விட்டான். காய்ச்சி வைத்திருக்கிறேன். ஓவல்டின் போட்டுக் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டாள்.
”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பவானி எனக்குப் பசியே இல்லை" என்றாள் கோமதி.
பவானி சிறிது தயங்கிக் கொண்டே நின்றாள். பிறகு சற்றுப் பயத்துடன். "கீழே இறங்கி வாயேன் மன்னி. இன்றைக்கு வெள்ளிக்கிழமை, கைகால்களை அலம்பிக் கொண்டு சுவாமி படத்துக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யேன். சற்றுக் காற்றாட ஊஞ்சலில் உட்காரேன்.