Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 04 - சரோஜா ராமமூர்த்தி
2.4. கிழவரின் கண்ணீர்
மனித வாழ்க்கையில் நடப்பவை யாவுமே வேடிக்கை என்றோ விசித்திர மென்றோ தள்ளிவிட முடியாது. ’கஷ்டங்களைச் சிரிப்பினாலேயே வெல்ல வேண்டும்' என்று வாயளவில் சொல்லி விடலாம். செய்கையிலே காண்பது அரிது. சிற்சில விஷயங்களை மிகைப் படுத்தாமல் சிலவற்றை வேண்டுமானால் ஒதுக்கி வாழ முயற்சிக்கலாம். ஆனால், அதி முக்கியமான விஷயங்களைச் செய்யமுன்பு ஆலோசித்துதான் ஆகவேண்டும்.
டாக்டர் ஸ்ரீதரன் சிறந்த அறிவாளி. வைத்திய மேதை. ஒரு டாக்டரின் வாழ்க்கையில் அலகாசச்தைக் காண்பது அரிது. அதுவும் பொறுப்பு உள்ள, திறமையுள்ள டாக்டருக்கு ஓய்வு கிடைக்கிறதா என்பது சந்தேகம், ஸ்ரீதரனின் மருத்துவ சாலையில், காலையிலும் மாலையிலும் கூடும் கூட்டத்தைப் பார்த்தே இதை அறிந்து கொள்ளலாம். ஒட்டி உலர்ந்த உடம்புடன் வரும் தாய் மார்கள், கன்னங்கள் ஒட்டி எலும்பு தெரியும்படி ஆடவர்கள், நோஞ்சான் குழந்தைகள், அளவுக்கு மீறிய சுகவாசத்தால் பருத்த உடல் கொண்ட பெண்கள், ஆண்கள். இப்படி ஏதோ ஒரு நோயைச் சொல்லிக் கொண்டு கூட்டம் நெரிந்தது.
அந்த நோயாளிகளில் பாதிக்கு மேல் குழந்தைகள் இருந்தார்கள். மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னங்களையும் நீலோற்பல விழிகளையும், முகத்திலே துள்ளி விளையாடும் சிரிப்பையும் அடைந்திருக்க வேண்டிய அவர்கள் நோய்களுக்கு இரையாகிவிடும் கொடுமையைத் தான் டாக்டர் ஸ்ரீதரனால் சகிக்க முடிய வில்லை.
இப்படி அல்லும் பகலும் பிறர் நலனைக் கருத்தில் கொண்டு வாழும் ஸ்ரீதரனால் தன்னுடைய குடும்பத்தில் அதிக அக்கறை செலுத்த முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பூராவும் சுவாமிநாதனே ஏற்று நடத்தி வந்தார். மாதாந்தரம் வாங்க வேண்டிய சாமான்கள் இதர செலவுகள் யாவும் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தன. குழந்தை ஜெயஸ்ரீயை விட அவர் அன்பு செலுத்தியது ராதாவிடம் தான். தாயையும் தந்தையையும் இழந்து சகோதரன் ஒருவனையே ஆதாரமாகக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணிடம் அவருக்கு அலாதி அன்பு ஏற்பட்டது. அத்துடன் ராதா வயது வந்த பெண். அவளைத் தக்கபடி காப்பாற்றித் தகுந்த இடத்தில் கல்யாணம் பண்ணித் தரவேண்டும் என்கிற கவலையும் பட்டு வந்தார் சுவாமிநாதன். அவர் வாழக்கையை விளையாட்டாகவும் விசித்திரமாகவும் கருதுபவர் அல்ல. எதையும் தீர