Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 07 - சரோஜா ராமமூர்த்தி
2.7. சென்னையில் மூர்த்தி
அன்று மாலையில் மியூஸியம் தியேட்டரில் கூட்டம் நெரிந்தது. சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகளால் நடத்தப்படும் பக்தை மீராவின் நாடகம் அங்கு நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. வசூலாகும் பணத்தை காசநோய் நிவாரணத்துக்கு அளிப்பதாக அவர்கள் அறிவித்திருந்தபடியால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்புவரையில் இடமில்லாமல் ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
இரண்டாவது வகுப்பில் நாகராஜனும் கோமதியும் உட்கார்ந்திருந்தார்கள். நாகராஜன் சற்றைக்கொரு தரம் தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், பிறகு மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தான். கோமதி முகத்தில் கோபம் பொங்க உட்கார்ந்திருந்தாள்.
வீட்டை விட்டு அவர்கள் புறப்படும் போது ஒரு சின்னஞ்சிறு தகராறு நடந்தது. கணவனுடன் டிராமாவுக்குச் செல்ல வேண்டும் என்று கோமதிக்கு ஆசை அவனும் அவமாகச் சேர்ந்து எங்குமே வெளியே போவதேயில்லை. நாகராஜனுக்குத் தன் 'பிஸினஸ்* ஒன்றேதான் லட்சியம். இந்த மாசத்தில் இருபதினாயிரத்துக்கு பிஸினஸ் போயிருக்கிறது. ”நான் கவனிக்கா விட்டால் அதில் கால் பங்குக்கூட நடந்திருக்காது" என்று மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.
பணம் ஏராளமாக வருகிறது. வீட்டில் கார் இருக்கிறது. வேலையாட்கள் இருக்கிறார்கள். இதனால் எல்லாம் கோபதிக்கு மனத்தில் திருப்தி ஏற்படவில்லை. வாழ்க்கையில் திருப்தியடையப் பணம் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அன்பும் ஆரோக்கியமும் சீரிய பண்பும் சேர்ந்தால்தானே அந்தப் பணத்தின் மதிப்பும் உயர்ந்து பிரகாசிக்கும்? மாசத்தில் இருபது நாட்கள் கணவனும் மனைவியும் சரியாகப் பேசக்கூட அவகாச மில்லாமல் நாகராஜன் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். மிகுதி நாட்கள் வீட்டில் இருந்தாலும் மனைவி மகளுடன் பேசுவதற்கு அவனுக்கு அவகாசம் இருக்காது. மாதாந்தரச் செலவுகள், புடைவைக் கடை பில்கள், டாக்டர் பில்கள். அவன் மேஜைமீது வைக்கப் பட்டிருக்கும். அவற்றுக்கு 'செக்' கிழித்துக் கையெழுத்துப் போட்டு குமாஸ்தா மூலமாக அனுப்பி விடுவான் .
மனைவி எழிலரசியாக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றாலும் கவனிக்க அவனுக்கு