Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 08 - சரோஜா ராமமூர்த்தி
2.8. சந்திப்பு
மூர்த்தி சென்னைக்கு வந்து விட்டான் என்பது நாம் ஆச்சரியமோ பரபரப்போ அடைய வேண்டி தில்லை. பசுமலையில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் தங்கியிருந்த-தற்குக் காரணமே பவானி தான். அந்த இளம் பெண்ணின் மனத்தைக் கெடுத்து தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே மூர்த்தி அங்கு தங்கியிருந்தான். வயது சென்ற மாமாவுக்காகவோ மாமிக்காகவோ அங்கு இல்லை.
பசுமலை ரயில் நிலையத்தை விட்டு பவானி புறப் பட்டு வந்த பாசஞ்சர் வண்டி கிளம்பிப்போன பிறகு சோர்ந்த மனத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வந்தான். பூட்டப்பட்டுக் கிடந்த பவானியின் வீட்டு வாசலை ஏக்கத்துடன் பார்த்தான். அவள் தினமும் மாலை வேளைகளில் மல்லிகைப் பூப்பறிக்கும் மல்லிகைப் பந்தலின் கீழ் பெருமூச்சுடன் சிறிது நேரம் நின்றான். ஆனால் உறுதியும், வைராக்கியமும், நெஞ்சழுத்தமும் நிறைந்த அவள் தோற்றத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தான் மூர்த்தி. கருணையே வடிவமாக விளங்கும் அந்தக் கண்கள் நடராஜப் பெருமானின் படத்தை நோக்குங்கால் கசிந்து கண் மல்கித் தம் அன்பை வெளியிட்டதைக் கவனித்திருக்கிறான். அதே கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்ததையும் பார்த்தான்.
திடசித்தம் நிறைந்த அந்தப்பெண் எங்கே இருந்தாலும் ஏமாற மாட்டாள் என்பது அவனுக்கு பொங்கிவிட்டது. ஆகவே இனி அவளைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்து போயிற்று.
பவானி ஊருக்குச் சென்று இரண்டு தினங்கள் கழித்து மூர்த்தி தனக்குச் சென்னையில் முக்கியமான அலுவகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான். சென்னையில் அவன் தங்குவதற்கு உறவினர் யாரும் கிடையாது. கல்கத்தா ஆபீசில் அவனுடன் வேலை பார்த்து வந்த நண்பர் ஒருவரின் சகோதரன் கோடம் பாக்கம் ஹாஸ்டல் ஒன்றில் இருந்து கொண்டு படித்து வந்தான்.
எழும்பூரில் இறங்கியதும், அவன் நினைவு வரவே மூர்த்தி நேராக கோடம்பாக்கம் சென்று ஹாஸ்டலில் அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்தான். தகவலும் கிடைத்தது. தன் பெட்டி படுக்கையை அங்கே வைத்து விட்டு, ஸ்நானம் செய்து காலை ஆகாரத்தை முடித்துக்