Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 10 - சரோஜா ராமமூர்த்தி
2.11. கண்ணீர் சுரந்தது
அவன் ஹாஸ்டலை அடையும் போது பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கலாம். அங்கும் நிசப்தமாகத் தான் இருந்தது. இடைவேளைச் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு மாணவர்கள் இன்னும் யாரும் வரவில்லை. நேராகக் கோபியின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றான் மூர்த்தி. ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கியும் போனான். அவன் கண் விழித்துப் பார்த்தபோது, மாலை சுமார் ஐந்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கோபி காலேஜிலிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு கையில் ’டென்னிஸ்' மட்டையுடன் வெளியே புறப்படத் தயாராக நின்றான்.
“என்னடா அப்பா பட்டப்பகலிலே இப்படித் தூக்கம்? உன் ஆபீசிலே உனக்குத் தண்டச் சம்பளம் கொடுக்கிறார்களாடா? இந்த மாசத்தில் நாலு நாள் இதோட மட்டம் போட்டிருக்கிறாய்? கொடுத்து வைத்த மகராசன் நீ" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு கோபி, ”எங்கேயாவது வெளியே போகிறாயா? இல்லை. தூக்கத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் போகிறாயா?" என்று கேட்டான்.
சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த மூர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே "கோபி! எனக்கு ஓர் அறை வாடகைக்குக் கிடைத்து விட்டது. ரெயில்வே லயனுக்கு ஓரமாக ஒரு ரோடு போகிறதே, அங்கே நாற்பந்தைந்தாம் எண் உள்ள வீட்டில் மாடியில் இருக்கிறது அறை. தெற்குப் பக்கம் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. சுகமாகக் காற்று வரும். ஏழு மணிக்கு மேல் அங்கே போய் விடுகிறேன் . உனக்கு ரொம்ப ’தாங்க்ஸ்' அப்பா. பத்து நாட்களாய் என்னை வைத்துக் கொண்டு சமாளித்தாய்!" என்று! கூறினான்.
"அடேடோ அப்படியா? என் பரீட்சை பிழைத்தது போ! நீயானால் அங்கே நாடகத்துக்கு வா, இங்க கச்சேரிக்கு வா என்று என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாய். போய்விட்டு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசியே மண்டையைத் துளைத்து விடுகிறாய். சரி. அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு" என்று கூறியவாறு கோபி வெளியே கிளம்பினான். அவன் திரும்பி வருவதற்குள் மூர்த்தி போவதனால் அறையைப் பூட்டிச் சாவியை அடுத்த அறையில் கொடுத்து விட்டுப் போகும்படி கூறிவிட்டுச் சென்றான் கோபி.