Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 14 - சரோஜா ராமமூர்த்தி
2.14. டாக்டர் வீட்டில் பவானி
அப்பொழுது புரட்டாசி மாதம். எல்லோர் வீட்டிலும் கொலு வைத்திருந்தார்கள். சுமதியின் வீட்டிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டிருந்தது. பவானி இந்தப் பண்டிடையை வெகு உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்து, தினமும் வித விதமாகச் சுமதியை அலங்கரித்தாள். தினுசு தினுசாகப் பலகாரங்கள் செய்தாள். இரவு பத்து மணி வரையில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று சுண்டலும், பழங் களும் வாங்கி வந்தனர். கோவிலுக்குப் போகும் ஸ்திரீகளின் கூட்டம் தெருக்களில் நிறைந்திருந்தது. அங்கங்கே சங்கீதக் கச்சேரிகள் நடந்தன. எல்லோர் வீட்டிலிருந்தும் கணீரென்று பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுமதியுடன். பாலுவும், ஊர் அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெரியவனாக பாலு இப்போது வளர்ந்திருந்தாலும், பழைய துடுக்குத் தனங்கள் அவனை விட்டுப் போகவில்லை.
“இங்கே பார் சுமதி! கொட்டை கொட்டையாகக் கண்களை வைத்துக் கொண்டு நிற்கிறதே இந்த வெள்ளைக்கார பொம்மை, அது உன்னைப் போலவே இருக்கிறது" என்றான் பாலு சிரித்துக் கொண்டே.
"என் மூஞ்சி இப்படித்தானாடா யிருக்கிறது?" என்று சுமதி கோபித்துக் கொண்டு கேட்டாள்.
”இல்லை சுமதி! உன் கண்கள் அப்படித்தானே இருக்கு?" சுமதிக்கு பாலுவுடன் பிறத்தியார் வீட்டில் சண்டை போட்டுக் கொள்ளப் பிடிக்கவில்லை, ”சரி, வாடா பாலு!" என்று சொல்லிக் கொண்டே சுமதி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. கறுத்த மேகங்கள் வானவெளி எங்கும் திரண்டு இருந்தன. ' பளீர் பளீர்!' என்று மின்னல்கள் கீற்றுக் கீற்றாக வானத்தில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை பளிச்சிட்டன. பேய்க் காற்று ஒன்று சுழன்று சுழன்று அடித்தது . சட சடவென்று மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன.
பாலு பின்னால் வருகிறானா என்பதைக் கூடக் கவனியாமல் சுமதி விடு விடுவென்று நடந்து வீட்டுக்குப் போய் விட்டாள். பாலு, மழை பெய்வதைச் சிறிது நேரம் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடியில் நின்றான். பிறகு, மழை பலத்து விடவே அவசரமாக வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவர்கள் வீட்டு வாசலில் வாழைப்பழத் தோல்கள் மழை