Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 16 - சரோஜா ராமமூர்த்தி
2.16. செல்வப்பெண் ராதா
வக்கீல் வேதாந்தம் தம் வீட்டு அறையில் மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருந்தார். பத்து தினங்களுக்கு முன்பு ஹோட்டல் வாசலில் ராதாவையும், மூர்த்தியையும் பார்த்த அவர். அதன் பிறகு ஒரு சினிமாவிலும் மெரினா கடற்கரையிலும், வேறொரு ஹோட்டலிலும் பார்த்து விட்டார். அந்தப் பிள்ளை யார்?" என்று எப்படியாவது விசாரித்துத் தகவல் சேகரிக்க முயன்றார். இதற்குள் ஊரில் ராதாவைப் பற்றிப் பல தினுசாகப் பேச்சுக்கள் அடிப்பட்டன. அதனால் மேலும் அவர் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்று தீர்மானித்து. தாமே டாக்டர் ஸ்ரீதரனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். இதை அவர் தம் மகளிடம் கூறியதும், ”அப்படித்தான் செய்ய வேண்டும் அப்பா ! நீங்களே இதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். நான் கூறினால் அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். நீங்கள் சொல்வது தான் நல்லது" என்றாள் காமாட்சி.
வேதாந்தத்துக்கு அவள் கூறுவது சரியென்று தோன் றியது. ஆகவே காரில் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கிக் கிளம்பினார் அவர், அங்கு அவர் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வீட்டில் இல்லை. சுவாமி நாதன் மட்டுமே உட்கார்ந்திருந்தார். சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது அவர் தெம்பாகவும் திடமாகவும் காணப்பட்டார். திடீரென்று வயசு அதிகமாகி விட்டவர் போல் அவர் தோற்றத்தில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருந்தது. வேதாந்தத்தைப் பார்த்ததும் அவர் வாருங்கள். ரொம்ப நாளாயிற்று உங்களைப் பார்த்து" என்று வரவேற்று. அவரை உட்காரும்படி கூறினார்.
"எங்கே இப்படி? டாக்டரைப் பார்க்க வந்தீர்களா? வீட்டில் மகள் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.
" எல்லோரும் சௌக்கியமாகத்தான் இருக்கிறோம். டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன். சில விஷயங்கள் பேச வேண்டும்..."
”அவர் எங்கே வீட்டிலிருக்கிறார்? குடும்பப் பொறுப்பு ஒன்றையுமே அவர் வகிக்கிறதில்லை. ’நீ என்ன செய்கிறாய்? குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது' என்றெல்லாம் கேட்பதில்லை.