Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 17 - சரோஜா ராமமூர்த்தி
2.17. கபடச் சிரிப்பு
சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தாள். நேராக மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்து விட்டாள் அவள். மணி ஐந்தரைக்கு மேல் ஆகியும் சுமதி பள்ளிக்கூடத்திலிருந்து வரவில்லையே என்ற கவலையினால் பவானி தோட்டக்காரன் கோபாலனை விசாரித்தாள். மாலை நாலரை மணிக்கே சுமதி வந்து விட்டதாகக் தெரிவித்தான் அவன். கோமதி துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தாள். பவானி. உள்ளம் வாட மாடியில் சென்று பார்த்தாள் அங்கே கட்டிலில் படுத்திருந்தாள் சுமதி. மெதுவாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. உடம்பு நெருப்பாகச் சுட்டது. லேசான முனகலுடன் சுமதி கண்ணை மூடிப் படுத்திருந்தாள். 'நாலைந்து நாட்களாகச் சரிவரச் சாப்பிடாமல். எதிலும் உற்சாகம் இல்லாமல் அவள் இருந்தது பவானிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி கோமதியிடம் அவள் இரண்டு மூன்று தடவைகள் சொன்னாள். "எல்லாம் சாப்பிடுவாள் இதற்கெல்லாம் ஒரு வைத்தியமா?" என்று கூறிவிட்டு கோமதி அலட்சியமாக இருந்து விட்டாள்.
பவானி, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து உதறிச் சுமதிக்குப் போர்த்தி விட்டாள்.
கீழே சென்று சிறிது காப்பியைச் சுட வைத்து எடுத்து வந்தாள். மெதுவாக, “சுமதி! சுமதி! இதைச் சாப்படு அம்மா. உனக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.
யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் இருந்தது சுமதி பேசிய வார்த்தைகள். "அத்தை! எனக்குத் தலையை வலிக்கிறது. எங்கோ போகிற மாதிரி இருக்கிறது அத்தை. டாக்டரை வர வழையேன்...."
பவானி அவசரமாக டாக்டர் ஸ்ரீதரனைப் போனில் கூப்பிட்டாள். ”குழந்தைக்கு ஜுரம் அடிக்கிறது. நூற்று மூன்றுக்கு மேலே இருக்கலாம். உடனே வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள்.
காலையில் டாக்டரிடம் சுவாமி நாதன் ராதாவின் விஷயத்தைக் கூறினார். அன்று மாலையே அவர்கள் வீட்டுக்கு ராதா. மூர்த்தியை யாரும் எதிர்பாராத விதமாக அழைத்து வந்தாள்.