Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 18 - சரோஜா ராமமூர்த்தி
2.18. ராதாவின் கல்யாணம்
ராதாவின் கல்யாண வைபவங்கள் அமர்க்களமாக நடைபெற்றன. பசுமலையிலிருந்து கல்யாணராமன். டாக்டர் ஸ்ரீதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 'பெண்ணும் பிள்ளையும் மனம் ஒப்பிக் கல்யாணம் செய்து கொள்கிறபடியால், பெரியவர்களாகிய நாம் அதை உடன் இருந்து நடத்த வேண்டியது ஒன்று தான் செய்யக் கூடியது. மிகவும் சந்தோஷம். நாங்கள் அவசியம் வருகிறோம்'- என்று கடிதம் வந்தது. பிள்ளையைச் சேர்ந்தவர்களில் பெரியவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். பரவாயில்லை என்று சுவாமிநாதனுக்கு ஒரு மகிழ்ச்சி .
இந்தக் கல்யாண ஏற்பாட்டில் நாகராஜன் வீட்டார் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனையோ இரவுகள் பவானி, டாக்டர் ஸ்ரீதரனுடன் போனில் பேசினாள்.
'குழந்தை தூங்காமல் ரொம்பவும் சிரமப்படுகிறாள். என்ன செய்வது?' என்று யோசனை' கேட்டிருக்கிறாள். அவர் கூறியபடியே செய்ததாகவும் பதில் கூறுவாள் பவானி. இந்நிலையில் கோமதியும் நாகராஜனும் மனமிடிந்து உட்கார்ந்திருந்தார்கள். யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இவர்கள் வீட்டுக்குத் தெரிய வில்லை.
மூன்றாவது வாரம் ஆரம்பித்த பிறகு சுமதியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஜுரம் தணிந்து கொண்டே வந்தது. கண்ணை விழித்துத் தன் அருகில் நிற்பவர்களைப் பார்த்தாள் அந்தப் பெண். ஜன்னல் ஓரமாக நின்று கவனித்த பாலுவை அவள் கண்கள் கவனித்தன.
"அத்தை, அத்தை !" என்று பலஹீனமான குரலில் கூப்பிட்டாள் அவள்.
"பாலுவை நான் இனிமேல் ஒன்றும் சொல்ல மாட்டேன் அத்தை. அவன் மனசை நோக வைத்தேன், அதற்கு அனுபவித்து விட்டேன்" என்றாள். பெரிய பாட்டி மாதிரி. அந்தப் பன்னிரண்டு வயசுப் பெண்.
பாலுவிற்கு அறைக்குள் ஓடிப் போய்ச் சுமதியின் முகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசை. இரண்டடி வைத்து முன்னால் வந்தவனைப் பவானி தடுத்தாள். பாலு! இந்த அறைக்குள் யாரும் வரக்கூடாது அப்பா! ஒருத்திக்கு வந்து படுகிற பாடு