Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 19 - சரோஜா ராமமூர்த்தி
2.19 கல்யாணம் முடிந்தது
கல்யாண வீட்டில் சாப்பிடும் கூடத்தில் ஒரு அறையில் பவானி. கல்யாணராமன், பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
”உங்கள் மருமகன் அதிர்ஷ்டக்காரர். நல்ல இடத்தில் பெண் கிடைத்தது. டாக்டர் ஸ்ரீதரனைப் போல் நல்ல மனிதர்கள் அநேகர் இருக்க மாட்டார்கள்” என்றாள் பவானி.
”கிடைத்ததை வைத்துக் கொண்டு நன்றாக வாழ்ந்தானானால் அவனுக்குச் சுகம் உண்டு" என்றார் கல்யாணராமன்.
”படித்த பெண்ணாயிற்றே! புருஷனைத் திருத்திக் கொண்டு போகிறாள் ' என்றாள் பார்வதி. எல்லோரும் மிகவும் தணிந்த குரலில் பேசினார்கள். பவானி மூர்த்தியைப் பற்றிப் பசுமலையிலேயே அவர்களிடம் ஒன்றும் சொல்லியதில்லை. அவர்களும் பேசியதில்லை. இத்தனை நாட்களைப் போல் மூர்த்தி ஒண்டிக் கட்டை அல்ல. இல்வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கும் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் கண்டுதான் ஆகவேண்டும் என்று எர்லோரும் தீர்மானித்தார்கள்.
கல்யாணம் இனிதாக நடந்து முடிந்தது.
கல்யாண வீட்டில் பவானி, பார்வதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த சுவாமிநாதன் அவளைத் தனியாக அழைத்துக் கேட்டார். "ஏனம்மா இவர்கள் உனக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களா? நம் வீட்டு மாப்பிள்ளையையும் உனக்குத் தெரியுமா?" என்று விசாரித்தார் பிள்ளையாண்டான் எப்படி?" என்றும் கேட்டார்.
பவானி தயக்கத்துடன் பதில் கூறினாள். "ஏற்கெனவே பசுமலையில் எனக்குத் தெரிந்தவர்கள் தான். மூர்த்தியைப் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? மனிதன் புனிதமே உருவானவன் என்றோ குற்றங்களையே செய்ய மாட்டான் என்றோ நாம் நினைப்பது தவறு, பல்வேறு சந்தர்ப்பங்கள் அவனைக் குற்றவாளி ஆக்குகின்றன. அவன் திருந்தி வாழவும் சந்தர்ப்பம் இருக்கிறது. ராதா படித்த பெண். கணவனை ஒழுங்கான பாதைக்கு அவள் திருப்பலாம்.