Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 21 - சரோஜா ராமமூர்த்தி
2.21. பணமேதான் ஜீவநாடி
பல மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரன் பவானியிடம் உங்களிடம் சில விஷயங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அல்லவா? அதன் பிறகுதான் ராதாவுக்குக் கல்யாணம் நடந்தது. புது மாப்பிள்ளை வந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் திளைத்தார் ஸ்ரீதரன் . இரண்டு மாதங்கள் ஜெயஸ்ரீயுடன் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார் அவர்.
திரும்பி வந்ததும் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலைகளில் ஈடுபட்டார். அப்பொழு-தெல்லாம் ஒன்றிரண்டு தடவைகள் தான் பவானியை அவர் பார்க்க நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவருக்கு அவளிடம் நிதானமாகப் பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அன்று என்னவோ அவருக்கு ஒழிவாக இருந்தது. மாடியில் ராதாவும் மூர்த்தியும் 'செஸ்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஜெயஸ்ரீ தோட்டக்காரன் ராமய்யாவுடன் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதனுக்கு உடம்பு முன்னைப் போல் இல்லை. வேலைகள் முடிந்து விட்டால் படுத்துத் தூங்கப் போய் விடுவார் அவர்.
ஸ்ரீதரன் தெரு வராந்தாவில் சோபாவில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தார். கல்யாணத்துக்கு முன்பே ராதா அவரிடம் நெருங்கிப் பழகுவதில்லை. இப்போது அவள் தன் அண்ணாவுடன் அதிகமாகப் பேசி எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.
ஜெயஸ்ரீ வளர வளர தகப்பனாரிடம் பிரத்தியேக மரியாதை காண்பித்தாள். ஏதாவது கேட்டால் பாத்திரம் பதில் கூறுவது. இல்லாவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.
டாக்டர் காமாட்சியைப் பார்த்து சிறிது நேரம் பேசிவரலாம் என்று நினைத்தார். அவர் அன்று கிராம் சேவிகா சங்கத்தில் பேசப்போவதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பவானியின் வீட்டு கோபாலன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு ராமய்யாவைப் பார்க்க வந்தான். டாக்டரை அங்கு பார்த்து விட்டு வணக்கம் செலுத்தினான்.