Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 22 - சரோஜா ராமமூர்த்தி
2.22. ஆண்டவனின் குரல்
டாக்டர் ஸ்ரீதரனின் யோசனையைப் பவானி தன் தமையனிடத்திலும் மன்னி-யிடத்திலும் தெரிவித்தாள். தனக்கும் அதில் ஆவல் இருப்பதாகச் சொன்னாள். இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நாகராஜன் ஸ்ரீதரனின் வீட்டுக்குச் சென்றான்.
”அவளுடைய பணம் ஐந்தாயிரம் என்னிடம் இருந்தது. அது இப்பொழுது பத்தாயிரமாக வளர்ந்திருக்கிறது. அதில் கிடைக்கும் வட்டியைக் கூட நான் அவளுக்காகச் செலவழிப்பதில்லை. 'எல்லாச் செலவு களையும் நானே பார்த்துக் கொள்கிறேன். பாலுவின் படிப்பின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவள் வேலைக்குப் போய்த் தான் ஆகவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ வசதிகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்" என்றான் நாகராஜன்.
தமையனுடன் பவானியும் சென்றிருந்தாள்.
"அண்ணா ! உன்னுடன் இருப்பதில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மற்றப் பெண்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் கடமைகள் இன்பங்கள் இருக்கின்றன. என்னுடைய மனசிலே சூன்யம் நிறைந்து போகாமல் இருக்கவே இப்படி என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன் அண்ணா " என்றாள் பவானி.
நாகராஜன் எந்த விஷயத்தையுமே ஆழ்ந்து நோக்குபவன் அல்ல. ஆகவே தங்கையின் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.
அடுத்த சில நாட்களில் பவானி நர்ஸ்கள் கல்லூரியில் சேர்ந்தாள். முதல் நாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பியதும் சுமதி, அத்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னென்ன புத்தகங்கள் படிக்கிறாள், நோட்டுப் புத்தகங்கள் எத்தனை வாங்கி இருக்கிறாள் என்று அறியும் ஆவலுடன் கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள் அந்தப் பெண்.
அவள் எதிர்பார்த்தபடி பவானி ஒரு சுமைப் புஸ்தகங்களைத் தூக்கிக்கொண்டு வரவில்லை.