Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 24 - சரோஜா ராமமூர்த்தி
2.24. உண்மைச் சொரூபம்
தெரு விளக்குகள் எல்லாம் ’பளிச்' சென்று எரிந்தன. மாடியில் இருந்த வராந்தாக்களின் விளக்குகளைப் போட்டு விட்டு ராமையா ராதாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பித்துப் பிடித்தவள் போல உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்துவிட்டு. * அம்மா! இருட்டிலே உட்கார்ந்து இருக்கீங்களே. விளக்குப் போடலீங்களா? நான் போடட்டுமா?" என்று கேட் டான்.
”வேண்டாம் ராமையா எனக்குத் தலைவலி. வேண்டும் பொழுது நான் விளக்கைப் போட்டுக் கொள்கிறேன். நீ போ" என்றாள் ராதா. தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, அவன் சென்றதும் அவசரமாக ஸ்நான அறைக்குள் சென்று முகம் கழுவித் தலை வாரிப் பின்னிக் கொண்டாள். மனசில் புதைந்து கிடந்த துக்கங்களை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். ராதாவைச் சற்று நேரம் காணவில்லை யென்றால் தேடிக் கொண்டு வரும் சுவாமிநாதன் அன்று மத்தியானத்தி-லிருந்து மாடிப் பக்கமே வரவில்லை.
நேராகச் சமையற்கட்டுக்குச் சென்று பார்த்தாள் ராதா. அங்கே சாப்பிடும் கூடத்தில் இருந்த பெஞ்சியில் அந்தக் கிழவர் படுத்திருந்தார்.
சாயங்கால வேளைகளில் திருநீறு அணிந்து கடவுளைத் துதிக்கும் அவர். அன்று படுத்துக் கிடந்தது ராதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று குனிந்து பார்த்து விட்டு, ”மாமா" என்று அழைத்தவாறு அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், ஜுரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை . நினைவே இல்லாமல் படுத்திருந்தார் அவர். திடீர் திடீர் என்று அவர் படுத்துக் கொள்வதும், சரிவரச் சாப்பிடாமல் இருந்ததும் ராதாவுக்கு நினைவுக்கு வந்தது . அவசரமாகப் போனை எடுத்து ஸ்ரீதரனின் மருத்துவ சாலைக்குப் ’போன்' செய்தாள். சிறிய நேரத்துக்
கெல்லாம் டாக்டர் வந்து சேர்ந்தார்.
சுவாமிநாதனைப் பரிசோதித்து விட்டு, அவருக்கு ரத்த அழுத்த வியாதி ஏற்பட்டிருக்-கிறதென்றும், நல்ல ஒய்வு கொடுக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப் பட்டார்.