Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 28 - சரோஜா ராமமூர்த்தி
2.28. சலனம்
யோசனை கேட்க வந்தவரின் மனசில் தெளிவை ஏற்படுத்தினார் ஸ்ரீதரன். வேதாந்தத்தின் கார் சென்றவுடன் சிறிது சிறிதாக அவர் மனம் இருள ஆரம்பித்தது. மனம் பல விதமான எண்ணங்களை அசை போட ஆரம்பித்தது.
காமாட்சியின் வருங்காலத்தைப் பற்றி வேதாந்தம் கவலைப் பட்டுக் கொண்டு வந்து போனதை நினைத்தவுடன் அவர் மனக்கண் முன் பவானி வந்து நின்றாள். சலனமற்ற அவள் முகபாவத்திலிருந்து அவரால் எதுவுமே கண்டு பிடிக்க முடியவில்லை. மலையிலிருந்து குதித்துப் பெருகும் ஆறு, சமவெளியில் வெகு நிதானமாக மென்னடை பழகிச் செல்வதைப் போல் ஒருவித நிதானம் அவளிடம் குடி கொண்டிருந்தது. அடக்கமும், பண்பும் உருவான பவானியைப் பற்றி ஒரே ஒரு சமயம் அவர் மனத்தில் சஞ்சலம் எழுந்ததுண்டு. நாகராஜன் வீட்டில் முதன் முதலாக அவளைப் பார்த்த அன்று அவர் மனத்திலே ஏதோ ஓர் ஆசை முளைத்து எழுந்தது. அன்று அவளைப் பற்றி. பூராவும் அறிந்து கொள்ளாத நிலையில் ஸ்ரீதரன் இருந்தார். பிறகு படிப்படியாகப் பவானியைப் பற்றிப் புரிந்து கொண்டார். பெண்களுக்கு இருக்கவேண்டிய குணச் சிறப்புகள் யாவும் அவளிடத்தில் இருப்பதைக் கண்டார். அன்று அவர் மனத்துள் எழுந்த ஆசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்றும் சொல்ல முடியவில்லை. ஸ்ரீதரன் உள்ளத் திண்மை வாய்ந்தவர். சட்டென்று எழுந்த ஓர் ஆசைக்குப் பிரதானம் கொடுக்காமல் அதை அடக்கிக் கொண்டு விட்டார். எல்ல வற்றிற்கும் மேலாக பாலுவைப் பார்த்ததும் பவானியிடம் அவருக்கு அலாதி அனுதாபமே ஏற்பட்டது. அந்தக் குழந்தையின் நலனுக்காக அவள் தன் சுகத்தையெல்லாம் உதறி விட்டுப் பிறருக்கு வேலை செய்வதைக் கவனித்தார். பிறருடைய சேவையில் அவள் இன்பம் காணுவது ஒன்று தான் அவருடைய மனத்தை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
காமாட்சியைப் பற்றி அவர் அன்றும், இன்றும் ஒரே எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர். ஆகவே வேதாந்தம் அப்படிக் கேட்டவுடன் அவருக்குக் கோபமோ, மனத்தாங்கலோ எழவிலலை. பாவம்! வயசான மனிதர்! அதனால் தான். அவர் இப்படிக் கேட்க நேரிட்டது என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.