Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 29 - சரோஜா ராமமூர்த்தி
2.29. குழந்தையின் குரல்
காரில் வந்து இறங்கிய வேதாந்தம் வாசல் வராந்தாவில் இருந்த மாடிப்படிகள் வழியாக ஏறி மாடியை அடைந்தார். அங்கு கிடந்த சோபா ஒன்றில் சாய்ந்து மின் விசிறியைச் சுழல விட்டுப் பெரு மூச்சு விட்டார் அவர். கடந்த சில வருஷங்களாக மனதில் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களுக்கு விடுதலை அளித்த நிம்மதி அவர் நெஞ்சில் நிறைந்திருந்தாலும், கூடவே ஒரு காரணமற்ற பயம் சூழ்ந்து கொண்டிருந்தது. மாலையோ, நாளையோ காமாட்சி, டாக்டர் ஸ்ரீதரனைச் சந்தித்தால் அவர் தன்னைப் பற்றிக் காமாட்சியிடம் ஏதும் கூறிவிடுவாரோ என்று அஞ்சினார். இந்தச் செய்தியை முன்னாடியே காமாட்சியிடம் கூறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றவே அவசரமாக மாடியிலிருந்து கீழே வருவதற்குக் கிளம்பினார்.
அப்போது. கீழேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறந்து சில நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ’குவா குவா' என்ற அந்த ஒலி இன்பமாக அவர் செவிகளில் வந்து விழுந்தது . 'யாரேனும் உறவினர்கள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்-களோ?' என்று நினைத்தார்.
இதற்குள் கீழே இருந்து அவர் மகளின் குரல் தெளிவாகக் கேட்டது.
”சொக்கம்மா! குழந்தை அழுகிறது பார். கொஞ்சம் தொட்டிலை ஆட்டு. இதோ பாலைப் புட்டியில் ஊற்றிக் கொண்டு வருகிறேன்" என்றாள்.
வேதாந்தம் வியப்பும் திகைப்பும் அடைந்தவராக மாடிப்படிகளில் சற்று வேகமாகவே இறங்கிக் கீழே வந்தார். கூடத்துக்கு அடுத்தாற் போல் இருக்கும் காமாட்சியின் அறையில் ஒரு 'ஸ்டாண்டு' தொட்டில் இருந்தது. அதைச் சுற்றிக் கொசுவலை கட்டியிருந்தது. தொட்டிலின் அருகில் காமாட்சி ஒரு சிறு பெஞ்சியின் மீது உட்கார்ந்து குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
வேதாந்தம் தம் மகளின் அருகே வந்தார். மிகவும் அதிசயத்துடன் ஒரு நூதனப் பொருளைப் பார்ப்பதைப் போல் தொட்டிலுக்குள் குனிந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டே, “ என்ன அம்மா இது?" என்று தம் மகளைப் பார்த்துக் கேட்டார்.