டாக்டராக இருந்தாள். அவள் மேற் பார்வையில், பொறுப்பில் தான் நோயாளிகள், பிரசவித்தவர்கள் உள்ளே தங்கியிருக்கவும். வெளியே செல்லவும் முடியும்.
காலையில் ஒவ்வொரு படுக்கையாகச் சென்று, பிரசவித்தவர்களில் வீடு செல்ல வேண்டிய பெண்களைச் சீட்டு எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாள். அன்று அந்த விடுதியில் சுமார் பத்து பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பெண்ணாக அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே சென்றனர். அன்புடனும், ஆசையுடனும் பெருமிதத் துடனும் அந்தத் தாய்மார்கள் தாங்கள் பெற்ற செல்வங்களை அள்ளி அணைத்துச் செல்வதைக் காமாட்சி கவனித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
கடைசியாக ஒரு பெண் தயங்கித் தயங்கிக் குழந்தையுடன் அவள் அருகில் வந்தாள்.
”ஏனம்மா! உன்னைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையா? உன் புருஷனின் பெயரென்ன?" என்று விசாரித்தாள் காமாட்சி. அவள் பதில் கூறு முன் தானே மேஜை மீது கிடந்த விவரங்கள் அடங்கிய புஸ்தகத்தை கவனித்தாள். அதில் அவளுடைய புருஷனின் பெயரைக் காணவில்லை. வேலப்பன் - சகோதரன் என்கிற விவரம் மட்டுமே காணப்பட்டது.
"உன் அண்ணன் கூடவா வரவில்லை?" என்று திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.
”அவர் என் அண்ணன் இல்லை அம்மா. அந்த சமயத்தில் நாதியற்றுக் கிடந்த என்னை மனமிரங்கி இந்த ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார். தகவல் கேட்டவர்களுக்கு தன்னை என்னுடைய அண்ணன் என்று கூறி இருக்க வேண்டும். எனக்கு யாருமே இல்லை டாக்டர் அம்மா ...."
சமூகத்தில் எந்த வெறியனுடைய ஆசைக்கோ பலியான புத்தியற்ற பெண் அவள் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாள் காமாட்சி. சமூகத்திலே பரவி இருக்கும் இந்தக் கொடுமைகளை நினைத்து அவள் மனம் சொல்லொணாத் துயரை அடைந்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு. "சரி, நீ என்ன செய்யப் போகிறாய்? எங்கே போகப் போகிறாய்?" என்று அவளை விசாரித்தாள்.