அந்தப் பெண் கண்ணீரை மாலை மாலையாக உகுத்தாள். கருவிலே அந்தக் குழந்தையை ஏற்ற விநாடியிலிருந்து அவள் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த துயர மனைத்தும் கரைந்து கரைந்து கண்ணீராக பெருகியது.
”இந்தக் குழந்தை உனக்கு வேண்டுமா? அதை நீ சரியாக வளர்ப்பாயா?"
அந்தப் பெண் தலைகுனிந்து மௌனமாக நின்றிருந்தாள். காமாட்சியின் முன்பு நடைபாதைகளிலே, மதகுகளின் ஓரங்களிலே, கடற்கரையின் மணலிலே பால் மணம் மாறாத மதலைகள் எறியப்பட்டும், கிடத்தப் பட்டும் இருக்கும் கோரங்கள் நர்த்தனம் புரிந்தன. காமாட்சி சட்டென்று அவள் பக்கம் திரும்பி ”இந்தக் குழந்தை எனக்கு வேண்டும். தருகிறாயா" என்று கேட்டாள்.
குழந்தையின் தாய் நன்றி நிறைந்த கண்களுடன் காமாட்சியை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு மெதுவாக அருகில் இருந்த மேஜை மீது குழந்தையைக் கிடத்தினாள். பத்து மாதங்களாக அது அவள் வயிற்றில் பெரிய சுமையாக இருந்தது. அது அவள் கைக்கு வந்த பிறகு அதன் பாரத்தை அவளால் தாங்க முடியவில்லை. தாய்ப்பாசம் தாயன்புகூட அந்த இடத்திலே காய்ந்து விட்டது. எல்லாமே ஒழுங்கான முறையிலும், நேர்மையிலும் இருந்தால் தான் பாசம், அன்பு, கடமை யாவும் தளிர் விடும். இல்லாவிடில் காய்ந்து சருகாக வேண்டியது தான்.
”நான் போய் வருகிறேன் அம்மா” என்று அந்தப் பெண் அவளிடம் வாயால் கூறி விடைபெறவில்லை. அவளுடைய கலங்கிய கண்களிலிருந்தும், பார்க்கும் பார்வையிலிருந்தும் காமாட்சி அவள் தன்னிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறாள் என்பதை உணர்ந்தாள்.
மேஜை மீது படுத்திருந்த குழந்தையின் பூப்போன்ற கன்னங்களில் அந்தப் பெண் ஒரு முத்தம் அளித்தாள். ரகசியமாக, தகாத முறையில் தாய்மைப் பதவியை ஏற்று கொண்ட அவளுடைய முதல்-கடைசி-முத்தமாக அது அமைந்தது.
”போய் வா அம்மா.... இனிமேலாவது ஒழுங்காக இரு" என்றெல்லாம் காமாட்சி அவளுக்கு உபதேசிக்க வில்லை. சுட்ட மண்ணை ஒட்ட வைக்கும் முயற்சியாக அது முடிந்தாலும் முடியக்கூடும். ஆகவே, அவள் அந்த பெண்ணின் கைச்செலவுக்கென்று ஏதோ கொஞ்சம்