பணத்தைக் கொடுத்தாள். குழந்தைக்கு விலை என்று காமாட்சி நினைத்துத் தரவில்லை. ஒருவேளை அந்தப் பெண் அப்படி நினைத்திருக்கலாம்.
அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து போய் இருந்த தம் மகளை வேதாந்தம் கண் கொட்டாமல் கவனித்தார். அவளாகவே பேசட்டும் என்று அவர் அவளை ஒன்றும் கேட்கவில்லை.
சிந்தனையிலிருந்து விடுபட்டு காமாட்சி மேற் கூறிய சம்பவங்களை ஒன்று விடாமல் தகப்பனாரிடம் கூறவும், அவர் வியப்பு மேலிட, தம் மகளின் உதார குணத்தையும், சேவை மனப்பான்மையையும் நினைத்து மகிழ்ந்தார்.
பகல் பொழுது தாம் பட்ட அவஸ்தையும், அதை மறக்கப் பற்பல இடங்களுக்கு அலைந்து திரிந்ததையும் நினைத்துத் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
தகப்பனார் பதில் ஒன்றும் கூறாமல் இருப்பதைப் பார்த்த காமாட்சி “ஏனப்பா! ஒன்றுமே பேசவில்லை! அதோடு நீங்கள் மத்தியானம் வீட்டை விட்டு கிளம்பி இப்பொழுது தான் வருகிறீர்கள் போல இருக்கிறதே" என்று விசாரித்தாள்.
"ஆமாம். அம்மா! என்னவோ ஒரு பைத்தியம் -மாதிரி எதையோ நினைத்துக் கொண்டு அலைந்துவிட்டு வந்தேன். "
"எங்கே போய் இருந்தீர்கள்?"
வேதாந்தம் மத்தியானம் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, ஸ்ரீதரன் கூறிய பதிலையும் சொன்னார்.
"என்ன அப்பா இது? உண்மையிலேயே பைத்தியக் காரத்தனம் தான் செய்திருக்கிறீர்கள். எனக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. என் மனசைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்களே ...."
"இல்லை அம்மா. சில மாதங்களாக நீ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வருவதும், பிறர் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் என்னை என்னவெல்லாமோ யோசிக்கச் செய்து விட்டது...?"