Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 32 - சரோஜா ராமமூர்த்தி
2.32. குற்றச்சாட்டு
கதையின் முதல் பாகத்தில் முக்கிய இடம் பெற்ற பசுமலை கிராமத்தைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். மப்பும் மந்தாரமும் நிறைந்த மத்தியான வேளை: கல்யாணராமனும், பார்வதியும் முன்னைவிட வயது சென்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. அன்று அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் நடந்தது. சாப்பாட் டுக்குப் பிறகு வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவரின் அருகில் வைத்து விட்டு உட்கார்ந்தாள் பார்வதி. கணவரிடம் வெற்றிலையை மடித்துக் கொடுத்துக்கொண்டே “எனக்கு என்னவோ இந்த மாதிரி தனியாக இருப்பது பிடிக்கவில்லை. எங்காவது நாலு ஊர்களுக்குப் போய் வரலாமே?" என்று கேட்டாள்.
கல்யாணம் மெதுவாகச் சிரித்தார்.
"ஊர் ஊராகப் போகிற வயசா நமக்கு? தலையைக் காலை வலித்தால், முன் பின் தெரியாத ஊர்களில் உன்னையும் என்னையும் யார் கவனிப்பார்கள்?"
"போகிற இடத்தில் நமக்கு வியாதி வரவேண்டுமா என்ன? முதலில் பட்டணம் போகலாம். அங்கே நம் மூர்த்தியையும், அவன் மனைவியையும் பார்த்துவிட்டு அப்புறம் எங்காவது போகலாம்.
கல்யாணம், பார்வதியை உற்றுப் பார்த்தார்.
”ஏன்? மூர்த்தியும் ராதாவும் தான் உனக்கு உயர்வாகப் போய்விட்டார்களா? பவானியையும் பாலுவை யும் மறந்து விட்டாயாக்கும்?" என்றார்.
”அவளை நான் மறந்தா போனேன்? வாரம் தவறினாலும் பவானி எனக்குக் கடிதம் போடத் தவறுவதில்லையே! பாலு பெரியவனாக வளர்ந்து விட்டானாம். பசுமலைக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானாம்...."
"அதெல்லாம் சரி. மூர்த்தியைப் பற்றி ஏழெட்டு மாசங்களாக ஒரு தகவலும் தெரியவில்லையே!