Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 37 - சரோஜா ராமமூர்த்தி
2.37. மகிழ்ச்சி வெள்ளம்
பவானி அன்று ஸ்ரீதரனைச் சந்திக்க முடியாமல், வீட்டுக்குப் புறப்பட்டாள். அவள் அங்கு வந்திருந்த சிலமணி நேரங்கள் ராதாவுக்கு எவ்வளவோ நிம்மதியையும் இன்பத்தையும் அளித்தன! வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தோல்வியைக் கண்ட பவானி, அந்தத்தோல்வியை உதறித் தள்ளி மிதித்து. வெற்றிப் பாதையில் போவதைக் கண்ட ராதாவின் உள்ளம் பவானியைப் பற்றி உயர்வாக மதிப்பிட்டது.
மாலையில் வீடு திரும்பிய ஸ்ரீதரனிடம் ராதா பவானி வந்து போனதை அறிவித்தாள். "வந்தவளை நான் வரும் வரை இருக்கச் சொல்லக்கூடாதா? முக்கியமான ஒரு விஷயம் பற்றிப் பேச அவர்கள் வீட்டுக்கே நான் செல்ல இருந்தேன்..." என்றார் ஸ்ரீதரன்.
”என்ன அண்ணா" என்று கேட்டாள் ராதா.
”முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பசுமலையில் காச நோய் வைத்தியசாலை-யொன்று கட்டி முடித்து, சமீபத்தில் நமது பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்தார். அதில் கூடிய விரைவில் பவானி நர்ஸாகப் பணி புரியச் செல்ல வேண்டி இருக்கும் என்று என் நண்பர் ஒருவர் கூறினார்."
”மறுபடியும் பவானி பசுமலைக்குப் போக விரும்புவாளா அண்ணா ? அவள் நெஞ்சில் ஆறாத கனலை மூட்டி விட்ட ஊர் அல்லவா அது?"
ஸ்ரீதரன் சிரித்தார். "ராதா! இங்கே தான் நீ பவானியைத் தவறாக மதிப்பிட்டிருக்கிறாய். நீறு பூத்த நெருப்பு மாதிரி, அவள் தன் துயரங்களைப் பல வருஷங்களுக்கு முன்பே மனத்தின் அடித்தளத்தில் புதைத்து விட்டாள். அதை ஊதி எரியச் செய்ய மாட்டாள் அவள். நடந்து போன துயரங்களைப் பற்றி நினைப்பதும் அதை பற்றியே பேசுவதும் மனத்தை எவ்வளவு தூரம் கெடுத்து விடுகிறது என்பது உனக்குத் தெரியாது. பவானி தன் துயரங்களுக்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சிக்க வில்லை' ' என்றார். ராதாவுக்குப் பவானியைப் பற்றிய செய்திகள் யாவுமே வியப்பை அளித்தன.