அவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, "நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான். உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள். அவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஒரு கலெக்டராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை! ஊருக்கு எவ்வளவு பெருமை! எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா?" என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.
சாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். "சரி என்று சொல் அப்பா" என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத்