தெரியாதா?" என்று உரக்கச் சொல்லி, "மடையன், கழுதை" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து, "என்ன அப்பா அது?" என்றார்கள்.
"ஒன்றும் இல்லை. அத்தை! காற்றாடி சிக்கிக் கொண்டது. இழுத்தேன். நூல் அறுந்துவிட்டது" என்றான் அந்தப் பையன்.
"பார்த்தாயா! உன் குணத்தைக் காட்டிவிட்டாயே! அவன் காற்றாடியை நீ ஏன் இழுத்தாய்? எதிலும் இப்படித் தானே முன்னேபோய் விழுந்துவிடுகிறாய்!" என்று பையனைப் பார்த்துச் சொன்னார். என்னைப் பார்த்து, "இரு தம்பி, எங்கள் வீட்டு வேலைக்காரப் பையனையாவது வேறு யாரையாவது கொண்டு எடுத்துத் தரச் சொல்வேன்" என்றார்.
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கார அம்மா வெளியே வந்து, "என்ன? காற்றாடிச் சண்டையா? ஆனிமாதம் பிறந்து விட்டதே! இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலையா?" என்றார். என்னைப் பார்த்ததும், "ஓ! வேலுவா? சண்டை போடாதேப்பா, இவனும் உன்னைப் போல் உங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்க வந்தவன்தான்" என்றார். உடனே அந்தப் பையனுடைய அத்தையைப் பார்த்து, "அம்மா! இந்தப் பையன்தான் வேலு. இவனைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டுப் பையன். அந்தப் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறான். போகவரத் துணையாக இருப்பான். நல்ல பையன், ஒரு கெட்ட பேச்சு வாயில் வராது" என்று என்னைப் பற்றி நற்சான்றும் கொடுத்தார்.
இப்படி அவசரப்பட்டு நூலை அறுத்த அந்தப் பையன் தான் சந்திரன். அந்த வீட்டுக்கார அம்மா என்னைப் புகழ்ந்த புகழ்ச்சியால் என் மனத்தில் இருந்த சினம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. சந்திரனுடைய அத்தை என்னை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் என் மனத்தில் அன்பை விளைத்தன. வேலைக்காரப் பையன் மடமட என்று வேப்பமரத்தில் ஏறிக் காற்றாடியை என் கையில் கொடுத்தவுடன், சந்திரன் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டேன். அன்று அந்தத் திண்ணையில் தான் எங்கள் நட்பு மெல்லத் தொடங்கியது. அது ஆயுள் நட்பாக வளர்ந்துவிடும் என்று அப்போது நான் எதிர்பார்க்கவேயில்லை.
சந்திரனுடைய ஊர் பெருங்காஞ்சி என்பதும் ஊரில் எட்டாவது படித்து முடித்தான் என்பதும், உயர்நிலைப்பள்ளியில், சேர்ந்து படிப்பதற்காக வாலாசாவுக்கு வந்தான் என்பதும் நல்ல எண்கள்