வாங்கி வகுப்பிலேயே முதல்வனாகத் தேறி இன்ஸ்பெக்டரிடம் நற்சான்று வாங்கி வந்தான் என்பதும் ஆகிய எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர்களோடு வந்த மாசன் என்ற அந்தப் பையனுக்குப் படிப்புத் தெரியாது என்றும் வேலைக்காக அழைத்து வந்தார்கள் என்றும், மரம் ஏறுவதில் கெட்டிக்காரன் என்றும் எல்லாவற்றையும் சந்திரனே சொன்னான். அவனுடைய தந்தை பயிர்த்தொழில் உடையவர் என்பது முதலான குடும்பச் செய்திகளை அவன் சொல்ல, என் தந்தை மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்தல் முதலான எங்கள் குடும்பச் செய்திகளை நான் சொன்னேன். அத்தை விதவை என்றும், குழந்தை இல்லாதவர் என்றும் சொன்னான். நான் பேச்சை நிறுத்துவதாக இருந்தாலும் அவன் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தான். புதிய இடம் புதிய ஆட்கள் என்ற தயக்கமே இல்லாமல் சந்திரன் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அதனால் நானும் அவ்வாறு பேசிப் பழகினேன்.
மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சிப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார். அன்று உயர்நிலைப்பள்ளி திறக்கும் நாள் ஆகையால், நான் புதிய ஆடை வேண்டும் என்று அம்மாவிடம் போராடிக் கொண்டு வீட்டினுள் இருந்தேன். "வேலு" என்று குரல் கேட்டது. பல நாள் பழகியவன் அழைத்த குரல்போல் இருந்தது. எட்டிப்பார்த்தேன். சந்திரன் அந்தத் தலைமையாசிரியரோடு நின்று கொண்டிருந்தான். "நான்தான் கூப்பிட்டேன். நீயும் வருகிறாயா?" என்றான்.
"இதோ வந்து விடுகிறேன், இரு" என்று சொல்லி, அம்மா கொடுத்த உடையை உடுத்துக்கொண்டு புறப்பட்டேன். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தபோது சந்திரனுடைய கை என் தோள்மேல் இருந்தது. ஆனால் அவ்வாறு அவனுடைய தோள்மேல், கைவைத்துச் செல்லும் அளவிற்கு என் மனம் துணியவில்லை.
----------------
தொடரும்...