உள்ளத்தில் இருந்த துன்பம் அவருக்கு எப்படித் தெரியும்? உட்கார்ந்தது போதும் என்றும், எப்போது விடுதலை கிடைக்கும் என்றும் என் மனம் ஏங்கியது. அசைந்து, அசைந்து உட்கார்ந்தேன். கடைசியில் எழுந்து நின்று, "போய் வருகிறேன். அம்மா கூப்பிடுவார்கள்" என்றேன். உடனே சாமண்ணா தன் மகனைப் பார்த்து, "பார்த்தாயா! அம்மாவுக்கு எவ்வளவு பயப்படுகிறான்? நீ உன் அம்மாவை ஏய்க்கிறாயே" என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "போய் வா, அப்பா! நல்ல பிள்ளைகளாக நடந்து படிப்பிலேயே கருத்தாக இருக்க வேண்டும். சந்திரனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். வாயிலைக் கடந்தவுடன், அவிழ்த்துவிட்ட கன்றுபோல் துள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.
சந்திரன் படிப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சாமண்ணா சொன்னார். அந்த நிலையில் அவன் இல்லை. ஆங்கிலம் தவிர, எல்லாப் பாடங்களிலும் அவனே முதன்மையாக இருந்தான். ஆங்கிலத்தில் மட்டும் வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன் என்பவன் வல்லவனாக இருந்தான். அந்த ஒரு பாடத்தில் சந்திரன் அவனோடு போட்டிபோட முடியவில்லை. ஒருநாள் ஆங்கில ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நீ கிராமத்திலிருந்து வந்ததால் உனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. முயற்சியோடு படி, அடுத்த ஆண்டில் சந்திரகுப்தனைவிட நீயே வல்லவன் ஆவாய்" என்றார். அந்தச் சொற்கள் சந்திரனுக்கு ஊக்கம் கொடுத்தன. "நம் நண்பன் சந்திரன் அந்தச் சந்திரகுப்தனைவிடத் திறமையானவன்" என்று நானும் பெருமை கொண்டேன்.
ஆனால், கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, என் தந்தையார் சந்திரன் பெற்ற எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, "சே இவ்வளவுதானா - நீ! கிராமத்துப் பையன் ஒருவன் வாங்குகிற மார்க்கும் நீ வாங்கவில்லையே, நீ எப்படி முன்னுக்கு வரப் போகிறாய்?" என்று வெறுத்தார்.
"எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் பார்" என்று சொன்னேன்.
"அதுபோதுமா’டா உனக்கு வேறு என்ன வேலை? மளிகைக் கடைக்கு வரச்சொல்லி ஏதாவது வேலை வைக்கிறேனா? அரிசி பருப்பு அளந்து போடச் சொல்கிறேனா? புளி மிளகாய் நிறுத்தப் போடச் சொல்கிறேனா? அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏதாவது வேலை வைக்கிறாளா? உன் படிப்புக்கு என்றே எல்லா ஏற்பாடும் செய்கிறோம். நீ இந்தக் கதியாக இருக்கிறாய், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காற்றாடி, பம்பரம், புள், கோலி என்று ஆடப் புறப்பட்டுவிடுகிறாய். நான் காலையில் சில்லறைக் கடைக்குப்போய் அங்கே ஆட்களோடு