திருமணம் ஆனதாம். நிறைந்த கர்ப்பமாக இருந்த காரணத்தால் தான் அம்மா அவருடைய திருமணத்திற்குப் போகவில்லை என்று ஒரு பேச்சில் தெரிவித்தார். நான் பிறந்த அன்றுதான், பாக்கியம் கணவனை இழந்தாராம். பிறந்த மகனுடைய முகத்தைக் கண்டு பூரித்து முகமலர்ந்து இருந்த என்தாய், மூன்றாம் வீட்டின் அழுகை ஆரவாரத்தைக் கேட்டுச் செய்தி தெரிந்து கொண்டு கண்ணீர் வடித்தாராம். பாக்கிய அம்மையாரின் உள்ளத்தில் என்னை வளர்த்த பாசம் ஒரு புறம் இருந்தபோதிலும், என்னைப் பார்த்த சில வேளைகளில் தம் கணவனை இழந்த நாள் நினைவுக்கு வந்து கண்ணீர் விடுவது உண்டு. ஆனால் எனக்கு அறிவும் நினைவும் வளர்ந்தபிறகு, அப்படிப் பாக்கியம் கண்ணீர் விட்டதைப் பார்த்ததில்லை. நான் குழந்தையாக இருந்தபோது அப்படிக் கண்ணீர் வடித்திருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?
அம்மா சொன்னது இன்னொன்றும் - அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னதும் - நினைவுக்கு வருகிறது. அம்மாவும் பாக்கியமும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, நான் அம்மாவின் நெற்றியிலிருக்கும் குங்குமத்தை எடுத்துப் பாக்கியத்தின் நெற்றியில் இடுவேனாம். பாக்கியம் தடுத்துத் தடுத்துக் கண்ணீர் விடுவாராம். "வேண்டா கண்ணு! நான் இடக்கூடாது கண்ணு!" என்று அழுவாராம். "அக்கா மூஞ்சிக்குத்தான் குங்குமம் நல்லா இருக்குது" என்று நான் பிடிவாதம் செய்வேனாம்.
உண்மையாகவே பாக்கியம் அழகான நெற்றியும் கண்களும் உடையவர். அவருடைய கருவிழிகளில் ஒளி மிகுதி. என் தாயின் முகத்தைவிடப் பாக்கியத்தின் முகத்தில் கவர்ச்சி அதிகம். அதனால் என்னுடைய பிஞ்சு நெஞ்சம் இரண்டு முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும்; பொட்டு இல்லாத குறையைத் தீர்க்க எண்ணியிருக்கும், பாக்கியம் சொன்ன காரணம், அப்போது என் அறிவுக்கும் பொருந்தாத காரணமாக இருந்திருக்கும். அதனால் நானும் பிடிவாதம் செய்திருப்பேன். ஒரு நாள் என் பிடிவாதத்திற்குப் பாக்கியம் விட்டுக் கொடுத்தாராம். நான் அந்த அளவில் விடாமல், கண்ணாடி கொண்டுவந்து "பாக்கியம்மா, நீயே இப்போ பார். எவ்வளவு அழகாக இருக்கே" என்று கண்ணாடியைக் காட்டினேனாம். பார்க்க முடியாதபடி பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்ததாம். உடனே என்னைக் கட்டி அணைத்து, "கண்ணே! உனக்கு இருக்கிற அவ்வளவு கருணை கடவுளுக்கு இல்லையே, கண்ணே!" என்று கதறி அழுதாராம்.
இப்படி எல்லாம் பாக்கியத்திடம் அன்பாகக் கொஞ்சியும் உள்ளத்தின் துன்பத்தைக் கிளறியும்