ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் சிறு பிள்ளையாக நடந்துகொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும், உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை. பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம். அப்படி அன்பாக இல்வாழ்க்கை நடத்தியவர் ஆகையால், மனைவி இறந்தவுடனே அவருடைய உள்ளம் ஒரே நொடியில் மூப்பு அடைந்து சாக்காடையும் நெருங்கிவிட்டது. அதனால் ஒரு நாளும் தந்தை சிரிக்கப் பார்த்ததில்லை என்று பாக்கியம் சொன்னது உண்மையாக இருக்கலாம். பாக்கியமோ சிரிப்பது குற்றம் என்னும் விதவை வாழ்வை அடைந்துவிட்டாள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த தம்பிக்கு இயற்கையான மனவளர்ச்சி இல்லாமற்போயிற்று. ஆனால் தாயும் தந்தையும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலத்தில் வளர்ந்த பாக்கியத்தின் உள்ளமோ வளர்ச்சி அடைந்த உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்ச்சிகள் வெளிப்படுவதற்கு ஒரு வகையில் என்னுடைய குழந்தைப் பருவம் உதவியாக இருந்தது. நானோ, குழந்தையாக இல்லாமல் வளர்ந்துவிட்டேன். என் மனமும் வளர்ந்து விட்டது. என் வளர்ச்சி பாக்கியத்தின் ஏமாற்றமாக முடிந்தது.
தை பிறந்தால் எனக்குச் சிரங்கு பிறப்பது வழக்கம். தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் என்பதைப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன். பள்ளிக் கூடத்தில் எந்தப் பையனோடோ பழகிய காரணத்தால் தொத்திக்கொண்டது என்பது என் பெற்றோர்களின் எண்ணம், சந்திரனும் என்னோடு படித்தான், பழகினான்; அவனுக்குச் சிரங்கு வரவில்லையே என்று நான் சொல்லி வந்தேன். சந்திரனோ, எனக்குச் சிரங்கு வந்துவிட்டதே என்ற காரணத்தால் என்னை விட்டு விலகவில்லை; பழகுவதற்குக் கூசவில்லை. நன்றாகப் பழகினான்; முன்போலவே அணுகியும் தொட்டும் பழகினான்; என் தோள்மேல் கை போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்தான்; என் பக்கத்தில் உட்கார்ந்தே பள்ளியில் படித்தான். ஆனாலும் அவனுக்குச் சிரங்கு வரவில்லை. நான் மட்டும் சிரங்கால் வருந்தியது என் மனத்துக்கு வேதனையாக இருந்தது. இந்த ஆண்டில் சிரங்குப் புண் ஒவ்வொன்றும் பெரிதாய்க் காலணா அகலம் இருந்தது. யானைச் சிரங்கு என்று சொன்னார்கள். கந்தகத்தைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி என் உடம்பெல்லாம் அம்மா பூசினாள். கந்தகத்தின் தீமை அப்போது எனக்கு எப்படித் தெரியும்? அதன் நாற்றம் எனக்கு மிக அருவருப்பாக இருக்கும். அய்யோ தலையெழுத்தே என்று பொறுத்திருப்பேன். கோவணம் கட்டிக்கொண்டு கந்தகம் பூசிக்கொண்டிருந்தபோது அம்மா அப்பா தவிர, வேறு யாரும் என்னை