Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 08 - மு. வரதராசனார்
அந்த ஆண்டிலும் இருவரும் தேறி மேல் வகுப்புக்கு வந்தோம். முன்போலவே சந்திரனைத் தலைமையாசிரியர் பாராட்டினார். ஆனால் இந்த முறை அவன் ஆங்கிலத்தில் மட்டும் முதன்மையாக வர முடியவில்லை. அதையும் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். சந்திரன் ஆங்கிலத்தில் இரண்டாம் தரமாக இருந்தான். அதற்காகக் கவலைப்பட்டான்.
அவனைத் தேற்றுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். "ஒரே ஒரு பாடத்தில் இன்னொரு பையன் முதன்மை பெற்றுவிட்டானே என்று கவலைப்படுகிறாயே. நான் எல்லாப் பாடத்திலும், நாற்பதும் நாற்பத்தைந்துமாக வாங்கியிருக்கிறேனே? என்னைப் பற்றி எண்ணிப்பார், நான் கவலைப்படுகிறேனா? போனால் போகட்டும் என்று விடு. இந்த ஆண்டில் முயற்சி செய். எஸ்.எஸ்.எல்.சி தான் முக்கியம் அதில் எல்லாப் பாடத்திலும் முதன்மை பெற்று விட்டால் போதும். அதுதான் பெரிய சிறப்பு என்று சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு சோர்வுடன் இருந்தான்.
பள்ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காலையில் சந்திரன் வீட்டில் அவனுடைய அப்பா சாமண்ணாவின் குரல் கேட்டது. உள்ளே எட்டிப் பார்த்தேன். சோர்ந்து வாடிய முகத்தோடு கற்பகமும் உட்கார்ந்திருந்தாள். வெளியே பின்வாங்கி வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். சாமண்ணா தம் அக்காவிடம் கற்பகத்தைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். "நான் எவ்வளவோ சொன்னேன். அவளுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். கேட்காமல் ஒரே பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போச்சு. பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். இந்த வயதிலே இவ்வளவு பிடிவாதம் கூடாது. அதற்காகத்தான் பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்" என்றார்.
அத்தை குறுக்கிட்டு, "நாங்கள் எல்லாம் என்ன படித்தோம்? ஓர் எழுத்தும் தெரியாது. கையெழுத்தும் போடமாட்டோம்; உள்ளூரிலே பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கே படித்தாய், முடித்தாய், கையெழுத்துப் போட, கடிதம் எழுத, ஒரு புத்தகம் படிக்கத் தெரிந்து கொண்டாய், அது போதாதா, கற்பகம்?" என்றார்.
மறுபடியும் சாமண்ணா, "இப்போதுதான் தெரியுது அந்த அளவுக்கும் படிக்க வைத்திருக்கக் கூடாது. அதுவே என் தப்புத்தான். வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக்