முதன்மையைப் பற்றிய பேச்சு ஏது?
மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காரணமோ என்னவோ தெரியவில்லை; முந்திய ஆண்டு வராமல் விலகியிருந்த சிரங்கு இந்த ஆண்டில் தை பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல்ல காலம்; அது முன்போல் யானைச் சிரங்காக வராமல் நமட்டுச் சிரங்காக வந்தது. அதுவும் ஒரு வகையில் பொறுக்க முடியாததாக இருந்தது. இப்போதுபோல், நல்ல ஊசி மருந்துகள் அப்போது அதற்குக் கிடைக்கவில்லை. ஆகவே மேற்பூச்சையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் நடக்கும் போதும் உட்காரும் போதும் சொரிந்துகொண்டே இருக்க நேர்ந்தது. வீடு, வகுப்பு, தெரு என்ற வேறுபாடு அதற்கு இல்லை. நன்றாக ஆழ்ந்து படிக்கும்போதும் கை சொரிவதில் ஈடுபட்டிருக்கும். எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே 'சொஞ்சரி சொஞ்சரி' என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என் தாயும் பாக்கிய அம்மையாரும் கற்பகமும்தான்.
மருந்து பூசிப் பூசி அது ஒருவாறு அடங்கியது எனலாம். ஆனால் அடங்கிய நோய்ப்பொருள் உள்ளே அமைதியாய்க் கிடந்த பிறகு வேறு வடிவில் வெளிப்பட்டது போல், நிமோனியாக் காய்ச்சல் வந்துவிட்டது. இருபது நாள் படுக்கையில் கிடந்து வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் தவிர, வேறு யாரும் என்னை அணுகவில்லை. தங்கையும் தம்பியும் அணுகி வந்தாலும் பெற்றோர் தடுத்து விட்டார்கள். கற்பகம் வந்தாலும் அவ்வாறே தடுத்தார்கள். தொத்தக்கூடிய நோய் என்று தடுத்தார்கள். ஆனாலும் கற்பகம் நாள்தோறும் திண்ணை வரையில் வந்து என் தங்கையிடம் பேசியிருந்து விட்டுச் செல்வாள். படுக்கையில் இருந்த என் செவிகளில் அவளுடைய குரல் நாள்தோறும் விழுந்தது. சில நாட்களில் மெல்ல வந்து ஒரு நொடிப் பொழுதில் எட்டிப்பார்த்துத் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் போவாள். சந்திரன் சில நாளுக்கு ஒரு முறை வந்து போவான். பாக்கியம்மா மட்டும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் வந்து எதிரே உட்கார்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு, 'தம்பி கஞ்சி சாப்பிட்டதா? இரவு தூங்கினதா?' என்று அன்போடு கேட்டுவிட்டுப் போவார். அப்போதுதான் அந்த அம்மாவின் உண்மையான அன்பு எனக்குப் புலப்பட்டது. காய்ச்சல் விட்டுத் தேறிய பிறகு அம்மா ஒருநாள்