பாக்கியத்தின் அன்பைப் பற்றிக் குறிப்பிட்டார். "உனக்கு காய்ச்சல் தன்னை மீறி இருந்தபோது இரவில் தூங்கிவிட்டுக் கவனிக்கத் தவறிவிடுவேனோ என்று பயந்து பாக்கியமும் என்னோடு வந்து படுத்துக்கொள்வாள். நான் தூங்கிவிடுவேன். தூங்கி விழித்தபோது பார்த்தால் அவள் உன் பக்கத்தில் உட்கார்ந்து விழித்திருப்பாள். பிறகு நான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவளை உறங்கும்படி வற்புறுத்துவேன். இப்படி எல்லாம் உன்னைக் காப்பாற்றினாள். உன் தொண்டை வறண்டு போகாதபடி பாலும் கஞ்சியும் கொடுத்துக் காப்பாற்றினாள். வேறு யார் அப்படிக் கண் விழிப்பார்கள்!" என்றார். அதைக் கேட்ட போது என் உள்ளம் உருகியது. ஆனாலும் பாக்கியத்திடம் முன்போல் நெருங்கிப் பழக முடியவில்லை. உள்ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற்று.
அந்த நோயால், என் முடிவுத் தேர்வு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். உடம்பு தேறிய பிறகும் அளவுக்கு மேல் படிக்கக் கூடாது என்று எல்லாரும் சொல்லத் தொடங்கினார்கள். சந்திரன் அவ்வப்போது வந்து அந்த இருபது நாளில் நடந்த பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான். இரவில் சாப்பிட்ட பிறகு படிக்கவே கூடாது என்று அம்மா கடுமையாகச் சொல்லிவிட்டார்.
தேர்வு நெருக்கத்தில் சந்திரன் பாக்கிய அம்மையாரின் வீட்டில் இரவும் பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்ற போது அவன் தலை மிக ஒழுங்காக வாரப்பட்டிருந்தது கண்டு, "இன்று மிகச் சீராகத் தலை வாரி வந்திருக்கிறாயே" என்றேன்.
"நான் வாரியது அல்ல. பாக்கியம்மா வாரிவிட்டார்கள்" என்றான்.
அதைக் கேட்டபோது எனக்குச் சிறிது பொறாமை ஏற்பட்டது. என்னிடம் உள்ளத்தில் அன்பு வைத்திருக்கிறாரே தவிர, இவ்வளவு நெருங்கி அன்பு பாராட்டுவதில்லையே என்று எண்ணினேன். உடனே நானே என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தாலும் நான் நெருங்கிப் பேசாமலும் பழகாமலும் இருந்தது என் குற்றம்தானே என்று உணர்ந்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
இரவும் பகலும் அந்த அம்மாவின் வீட்டிலேயே இருந்து படித்த அவன், ஒருநாள் நான் போனபோது அங்கே இல்லை. "எங்கே தம்பி வந்தாய். போகிறாய்?" என்று அந்த அம்மா கேட்டார். "சந்திரனைப் பார்க்க வந்தேன்" என்றேன். "அது வீட்டில் இருக்கும்" என்றார். அன்று