இரவும் அவன் அங்கே போகவில்லை. கணக்கில் ஒரு சந்தேகம் கேட்பதற்காகத் தான் போயிருந்தேன். அங்கே இல்லாமற் போகவே மறுபடியும் அவனுடைய வீட்டுக்கே போய்ப் பார்த்தேன்.
"பாக்கியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஏன் அங்கே போகவில்லை?" என்று கேட்டேன்.
"எனக்கு அங்கே இருந்து படிப்பதைவிட இங்கிருந்து படிப்பதே நன்றாக இருக்கிறது" என்றான். அவனுடைய முகமும் வாட்டமாக இருந்தது.
"அண்ணன் போக்கு மனம் போன போக்கு. மறுபடியும் நாளைக்கு அங்கேதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று போய்விடுவார்" என்றாள் கற்பகம்.
"சே! உன்னை யார் குறுக்கே பேசச் சொன்னார்கள்" என்று சந்திரன் எரிச்சலோடு கடிந்து கூறினான்.
அதைக் கேட்டவுடன், நான் காரணம் வேறே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாக்கியம்மா வீட்டில் சந்திரனுக்கும் அந்த அம்மாவுக்கும் அல்லது சந்திரனுக்கும் அந்த அம்மாவின் தம்பிக்கும் ஏதோ கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், என்ன காரணம் என்று அவனைக் கேட்கவில்லை. எரிச்சலோடு பேசுவதால் இப்போது கேட்கக்கூடாது. நாளை மறுநாள் அவனே சொல்லட்டும் என்று, என் கணக்குச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு நானும் அவனும் முனைந்து படித்துக் கொண்டிருந்தோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போவதும் நின்றது. அப்போதும் அவன் பாக்கியம் வீட்டுக்குப் போனதை நான் பார்த்ததில்லை. அந்த அம்மாவும் அதைப் பற்றி யாரிடமும் குறிப்பிடவில்லை. தேர்வு நெருக்கடியால், நானும் அந்த அம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. அவர் மட்டும் எங்கள் வீட்டுக்கும் சந்திரன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.
நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்தது. ஆனால் படிக்க உடம்பு இடம் தரவில்லை. சோர்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும் காய்ச்சல் வராமல் பார்த்துக்