(Reading time: 16 - 32 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

கொள்ள வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விழிப்பாக இருந்தார்கள். காலையில் எழாதபடி தடுத்தார்கள்.

  

அதற்கு நேர்மாறாக சந்திரன் முன்போல் படிக்கவில்லை என்று அத்தை குறை சொன்னார். அவனும் அடிக்கடி சோர்ந்து போவதாகவும், போன ஆண்டில் படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில்லை என்றும், குணமும் முன்போல் இல்லை என்றும், தாம் கண்டித்து அறிவுரை செய்வதால் தம்மோடு முன்போல் பேசுவதில்லை என்றும் அம்மாவிடம் சொல்லி வருந்தினார். "அப்படித்தான் இருப்பார்கள் சின்னப் பிள்ளைகள். தவிர, படிப்பு பொல்லாதது; பெரிய சுமையாக இருக்கும். அதனால் சரியாகப் பேசவும் மனம் இருக்காது" என்று அம்மா தேற்றியனுப்பினார்.

  

தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், "என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

  

அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவலை இல்லாமல் முழுநேரமும் திருவிழாப் பார்த்து அனுபவித்திருக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.

  

திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். புலிவேடம், கரிவேடம், சாமியார் வேடம், குறத்தி வேடம் என்று இப்படிப் பலர் பல வேடம் போட்டுக்கொண்டு வேடிக்கை செய்தார்கள். ஆண் பூதமும் பெண் பூதமும் ஆடிய ஆட்டங்கள் நன்றாக இருந்தன. எல்லாவற்றையும்விடப் பூக்கடைக்காரர்கள் சேர்ந்து நடத்திய வாணவேடிக்கை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில் இருந்த செவிடர்களின் காதுகளிலும் வாணவெடிகள் கேட்டிருக்கும். பாம்புகள் போலவும், பூமாரி போலவும் வகை வகையான மத்தாப்பு ஒளியோடு வெடித்த வெடிகளுக்குக் கணக்கில்லை. வாண வேடிக்கைக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என்றும், அதுபோல் எந்த ஆண்டிலும் நடந்ததில்லை என்றும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் இரவு ஒருமணி வரையில் வாணம் வெடித்தபடியே இருந்தது. ஊரே அதிர்ந்து போயிற்று. வானுலகம் மண்ணுலகத்தோடு சேர்ந்து கூத்தாடுவதுபோல் இருந்தது, அந்த ஒளியும் ஒலியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.