என் தம்பி கடைசி வரையில் கண் விழித்திருந்து ஒவ்வொரு வெடிக்கும் எழுந்து எழுந்து துள்ளித் துள்ளிக் குதித்தான். என் தங்கையும் கற்பகமும் முந்திய ஆண்டில் மகிழ்ந்தது போலவே பார்த்து மகிழ்ந்தார்கள். அத்தை, அம்மா, பாக்கியம், எல்லோரும் எங்கள் வீட்டின் திண்ணையை அடுத்து உட்கார்ந்தபடியே பார்த்துக் களித்தார்கள். பாக்கியத்தின் தந்தையும் தம்பியும் அவர்கள் வீட்டுத் திண்ணைமேல் படுத்திருந்தார்கள். எங்கள் அப்பா எங்கள் திண்ணையில் படுத்துவிட்டார். சந்திரனும் நானும் படுக்காமல், உட்கார்ந்தபடியே நெடுநேரம் பார்த்திருந்தோம். ஆனால் முந்திய ஆண்டில் இருந்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. மூன்றாம் ஆண்டில் அவன் வந்த புதுமையில் இங்கும் அங்கும் பரபரப்பாகச் சென்று திருவிழாவைப் பார்த்தோம். இந்த ஆண்டில் தேர்வு முடிந்த பிறகும், படிப்புச் சுமை இல்லாத நிலையிலும் எங்கள் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. நான்கு பேருக்கு இடையில் நாங்களும் கண்விழித்திருந்தோம். சந்திரனுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தது. எனக்கு உறக்கமே வந்துவிட்டது. காரணம் நோயினால் என் உடம்பு அவ்வளவு சோர்ந்து போயிற்று. அவனுக்கு மகிழ்ச்சி இல்லாத காரணம், தேர்வில் நன்றாக எழுதாத குறையாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையும் அவன் என்னிடம் வாய்விட்டுச் சொல்லவில்லை.
----------
தொடரும்...