Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 09 - மு. வரதராசனார்
வைகாசி முடிவில் தேர்வின் முடிவுகள் வந்தன. நான் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஓர் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வேண்டுமே என்று எண்ணி மிக வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் "கவலை வேண்டா. நீ நோயிலிருந்து தப்பிப் பிழைத்ததே போதும்" என்று தேற்றிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தேர்ச்சி பெற்றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் வாங்கவில்லை. ஆசிரியர்கள் எல்லோருக்கும் உடன்படித்த மாணவர்களுக்கும் - இது பெரிய வியப்பாக இருந்தது. வரலாற்று ஆசிரியரின் மகன் சந்திரகுப்தன் நான்கு பாடங்களில் முதல்வனாக இருந்தான். மற்றொருவன் மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றுவிட்டான்.
பெருங்காஞ்சிக்குப் போய்ச் சந்திரனைப் பார்த்துத் தேறுதல் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். நானே தேர்ச்சி பெறாதபோது நான் போய் அவனுக்குத் தேறுதல் சொல்வது பொருந்தாது என்று எண்ணி நின்றுவிட்டேன்.
ஆனாலும், சந்திரனிடத்தில் எனக்கு நன்றியுணர்ச்சி இருந்தது. ஏன் என்றால், அவன் சொல்லிக் கொடுத்த கணக்கில்தான் நான் நிறைய எண்கள் வாங்கியிருந்தேன். தமிழ்ப்பாடத்திலும் அதற்கு அடுத்த நிலைதான் இருந்தது. ஆங்கிலத்திலும் விஞ்ஞானத்திலும் எண்கள் குறைந்து போயிருந்தன. அந்தப் பாடங்களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்று தலைமையாசிரியர் சொன்னார்.
சந்திரனுடைய தகப்பனார் ஊரிலிருந்து வந்தார். அவனைச் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும், சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் அதற்கு வேண்டிய முயற்சி செய்வதாகவும் கூறினார். நான் தேர்ச்சி பெறாததற்காகக் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்குமாறு தேறுதல் மொழிகள் சொல்லிவிட்டுச் சென்றார். அவன் கல்லூரியில் சேர்வதற்கு முன் அவனைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தேன். நேராக ரயில் ஏறிச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நானாவது அவனுடைய ஊர்க்குப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேனே என்று என்னையே நொந்து கொண்டேன். சென்னையில் அவனுடைய முகவரி தெரிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும்பினேன். முகவரியும்