தெரியவில்லை. இன்னும் சில வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள்தோறும் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.
பள்ளி திறந்ததும், முன் படித்த வகுப்பிலேயே மிகச் சோர்வோடு போய் உட்கார்ந்தேன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவர்கள் பலர் என்னோடு வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில் எனக்குத் துணையாக இருந்த சந்திரன் இப்போது இல்லை. அவன் இல்லாமல் நான் மட்டும் தனியே இருந்தது, எனக்குத் துயரமாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் திரும்பும்போதும் அந்தத் தனிமையை நன்றாக உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களோடும் வகுப்பில் உள்ளவர்களோடும் கலகல என்று பேசிப் பழக எனக்கு மனம் இல்லாமற் போயிற்று. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணர்ச்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எஸ். எஸ். எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான் என்று வருந்தினேன். உடனே அந்தப் பழைய குறையை மறந்துவிட்டுப் புதிய ஊக்கத்தோடு முயலும்படியாக எழுதினேன், அந்தக் கடிதத்தைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். என்ன காரணமோ, புதிய ஊர் பிடித்திருக்காது என்று அம்மாவும் வருந்தினார்.
அதற்குப் பிறகு அவன் பதில் எழுதவில்லை. மறுபடியும் நானே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு எழுதிய பதிலும் சுருக்கமாகவே எழுதியிருந்தான். விடுமுறையில் ஊர்க்கு வரப்போவதாகவும் அங்கு வந்தால் தோப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால், விடுமுறை எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை.
எனக்கு கால் தேர்வு வந்தது. அவனுக்கும் அப்போது தேர்வு நடக்கும் என்றும், அதன் பிறகு தான் விடுமுறைக்கு வருவான் என்றும் எண்ணியிருந்தேன். என் தேர்வு முடிந்த பிறகு