(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

மறுபடியும் என்னைப் பார்த்து, "நீயும் அவனோடு போய்ப் படித்துக் கொண்டிருந்தால் அவன் இப்படிக் கெட்டுப் போயிருக்கமாட்டான். மார்க்கு இவ்வளவு குறைந்திருக்காது. எங்களுடைய போதாக் காலம், உனக்கு நோய்வர, நீ பரீட்சையில் தவறி விட்டாய். என் செய்வது? இந்த வருசம் நீ பரீட்சையில் தேறி, அடுத்த ஆனியில் நீயும் பட்டணத்துக்குப் போய்ப் படிப்பதாக இருந்தால்தான் அவனை அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன். இல்லையானால் நிறுத்திவிடப் போகிறேன்" என்றார்.

  

அதைக் கேட்டு என் மனம் உருகியது. என்ன சொல்வது என்று தெரியாமல் விடை பெற்றுப் புறப்பட்டேன்.

  

வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். "யார் சாமி போகிறது?" என்றான்.

  

"இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்".

  

"யார் வீட்டுக்கு வந்தீர்கள்?"

  

"சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு".

  

"அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு முன்னே பட்டணம் போச்சே, இது யாரு என்று பார்த்தேன்.

  

"சந்திரனைத்தான் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் இல்லை" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.

  

கிழவியின் குரல் கேட்டது: "அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டணத்துக்கு."

  

"போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருந்தால், கொழுத்துப்போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்து விடும். அதுவும், பெரிய வீட்டுப் பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.