(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

கிழவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, நின்று மெல்ல நடந்தேன்.

  

"இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள்? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல என்னைப் போலப் பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயே?" என்று கிழவி சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றேன். அங்கு இருந்த மரத்தில் ஏதோ பறிப்பதுபோல நின்றேன்.

  

"மொட்டையம்மாவின் தம்பி சாமண்ணா நல்லவர். ஒரு தப்புக்கும் போகமாட்டார். எனக்குத் தெரிந்து இல்லை" என்றான் கிழவன்.

  

"அப்பன் யோக்கியமா இருந்தால், பிள்ளையும் அப்படி இருக்குதா? அதுதான் உலகத்தில் இல்லையே" என்றாள் அவனுடைய அனுபவம் முதிர்ந்த வாழ்க்கைத் துணைவி.

  

நிழற்படக் கருவி இருந்தால் அந்தக் கணவனையும் மனைவியையும் அவர்களுடைய கற்புள்ள வாழ்க்கைக்கு இடமாக விளங்கிய அந்தக் குடிசையையும் படம் எடுத்து வைத்துப் பூசை செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது.

  

சந்திரனுடைய வாழ்க்கையில் உண்மையாகவே களங்கம் தோன்றிவிட்டதோ என்று வருத்தத்தோடு எண்ணியபடியே நடந்து வந்து ஏரிக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் நின்றேன்.

  

அந்த ஏரிக்கரையின் அழகும் சாலையின் ஒழுங்கான மரங்களின் எழிலும் என் கண்களைக் கவரவில்லை. ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. நீர் நிரம்பிய காட்சியைப் பார்க்க வேண்டும் என்று முதல்முறை வந்தபோது என் மனம் ஆசை கொண்டது. அன்று பஸ் வரும் என்று காத்து நின்றபோது, என் கண் எதிரே அந்த ஏரி நிறைந்த செல்வத்தைக் கண்டேன், ஆயினும் என் மனம் அந்த அழகில் ஈடுபடவில்லை.

  

நிறைந்த நீரில் கரையோரத்தே வந்து மோதும் அலைகளைக் கண்டேன். என் மனத்திலே சந்திரனுடைய களங்கம் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.