(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

நினைவுக்கு வந்தது. அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன். தாழையின் இலைகளை அப்படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம் காலிலும் படாமல், பிறர் காலிலும் படாமல் அவற்றை எறிய வேண்டும். ஆனால் பூக்களோ மணம் நிறைந்த பூக்கள், அவற்றின் மணத்திற்கு நிகர் ஏது?

  

இவ்வாறு பல எண்ணிக் கொண்டிருந்தபோது ஆங்கில ஆசிரியர் பைரன் என்னும் ஆங்கிலப் புலவரைப் பற்றி வகுப்பில் கேட்டது நினைவுக்கு வந்தது. பைரனுடைய பாட்டுகளை மட்டுமே எடுத்து நுகர வேண்டுமாம்; அந்தக் கவிஞனுடைய வாழ்க்கைச் செய்திகளை மறந்தொழிக்க வேண்டுமாம்; அவை பயனற்ற நாகரிகமும் அற்ற - மதிப்புக்கு உரியனவல்லாத - செய்திகளாம். உடனே, மனிதரிலும் தாழைபோல், அரளி போல் சிலர் உள்ளனர் என்ற உண்மை விளங்கியது. சந்திரனுடைய அறிவும் அழகும் தவிர, அவனுடைய வாழ்க்கையில் நல்லவை வேறு இல்லை என்று எண்ணினேன்.

  

கீழிருந்து ஒரு நறுமணம் வந்ததை உணர்ந்தேன். என் இடக்கைப் பக்கம் ஒரு பனைமரத்தின் அடியில் துளசிச்செடி ஒன்று இருந்தது. அதன் மணம்தான் என்று உணர்ந்தேன். அந்தச் செடி அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அதனிடம் கவர்ச்சியான மலர்களும் இல்லை. மலர்களுக்கும் இலைகளுக்கும் நிறத்திலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை. ஆனால் துளசிமலர்கள் போலவே துளசி இலைகளும் நறுமணம் வீசும் சிறப்பு ஒரு புதுமை என உணர்ந்தேன். குனிந்து ஒரு காம்பை ஒடித்து முகர்ந்தேன். அந்த நறுமணம் மலர்களின் மணமா, இலைகளின் மணமா என்று பகுத்துணர முடியவில்லை. எதைக் கிள்ளி எறிவது, ஏன் கிள்ளி எறிவது என்று வியந்தேன். என்னை அறியாமல், அந்தக் கிளையில் இலை இல்லாத குச்சியை ஒடித்து மூக்கின் அருகே கொண்டு சென்றேன். அது வெறுங் குச்சி: இலை, பூ ஒன்றும் இல்லை. ஆனாலும் துளசியில் அருமையான நறுமணம் வீசியது. ஒருகால் இலைகளைத் தொட்ட என் விரல்களில் இருந்த நறுமணமோ என்று விரல்களை நன்றாக வேட்டியில் துடைத்து அந்தக் குச்சியை மறுபடியும் மூக்கின் அருகே கொண்டு சென்றேன். முன் போல் நறுமணம் கமழவே, துளசிக் குச்சிக்கும், நறுமணம் இருத்தலைத் தெளிந்தேன். என் வியப்பு மிகுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.