Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 10 - மு. வரதராசனார்
அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை எஸ். எஸ். எல். சி. யில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆனியில் தான் படிக்கும் கல்லூரியிலே வந்து சேர்ந்திடுமாறு எழுதியிருந்தான்.
அதற்கு முந்திய கடிதங்களைவிட அந்தக் கடிதத்தில் அவனுடைய மனநிலை நன்றாக இருந்தது. ஒருகால், நான் அவனுடைய உதவியைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்த காரணத்தால், அவனுடைய நல்ல உள்ளம் வெளிப்பட்டு மகிழ்ச்சியோடு அவ்வாறு எழுதியிருக்கலாம். எப்படியோ அவனுடைய மனநிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
வழக்கமாக வரும் சிரங்கு அந்த ஆண்டு வரவில்லை. அதற்குப் பிறகும் அது என்னைத் திரும்பப் பார்த்ததில்லை. விருந்தினரும் எங்கள் வீட்டுக்கு அந்த ஆண்டில் மிகுதியாக வரவில்லை. ஆகவே ஒருவகை இடையூறும் இல்லாமல் படிக்க முடிந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி ஏறக்குறைய இரண்டு மைல் தனியாகவே நடந்து சென்று இலுப்பை மரங்களுக்கு இடையே கால்மணி அல்லது அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து, பிறகு வந்த வழியே அமைதியாகத் திரும்பி வருவேன். போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய கோலங்களைச் சிறிது நேரம் பார்த்திருப்பேன். மேற்கு வானமும் என்னைப் போலவே நாள்தோறும் புதுப் புதுப் பாடங்களை எழுதிப் பார்த்து நினைவூட்டிக்கொள்வது போல் இருக்கும். முழுநிலா நாட்களிலும் அதற்கு முந்தி இரண்டொரு நாட்களிலும் மட்டும் கிழக்கு வானம் என் கண்ணைக் கவரும். பெருங்காஞ்சியிலும் அந்த இலுப்பைமரச் சாலையிலும் சந்திரனோடு இருந்து முழு நிலாவின் அழகைக் கண்டு மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. நிலாவின் வாழ்வை ஒட்டி நாட்களும் மாதங்களும் நகர்ந்து செல்லச் செல்ல முடிவுத் தேர்வு வந்து விட்டது.
அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கும்படியாகவும் வற்புறுத்தவில்லை. படிக்காமல்