வாரங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாரங்களில் மளிகைக் கடையின் நுட்பங்களை ஒருவாறு தெரிந்து கொண்டேன் என்று சொல்லலாம்.
என் தேர்வு முடிவும் அதற்குள் வந்துவிட்டது. நான் தேர்ச்சி பெற்றேன். தமிழ், கணக்கு இரண்டு பாடங்களிலும் முதன்மை பெற்றேன். அப்பாவுக்கு என்னுடைய தொண்டு முறையைக் கண்டும், கடை வேலையைக் கவனித்ததைக் கண்டும், என்மேல் அன்பு வளர்ந்திருந்தது. ஆகையால், கல்லூரியில் படிக்கவேண்டும் என்று என் வேட்கையைத் தெரிவித்தவுடன், "சரி, உன்விருப்பம் போல் செய். இப்போது ஒன்றும் அவசரம் இல்லையே! இன்னும் இரண்டு வாரம் நான் கடையை முன்போல் கவனிக்க முடியாது. மாலையில் வந்து திரும்பிவிடுவேன். இந்த இரண்டு வாரமும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். அவ்வாறே செய்தேன்.
தேர்வின் வெற்றியைச் சந்திரனுக்குத் தெரிவித்திருந்தேன். அவன் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வழிகளைக் காட்டிப் பதில் எழுதினான். தானும் இண்டர்மீடியட் இரண்டாம் வகுப்பில் தேறியுள்ளதாக எழுதியிருந்தான்.
இரண்டு வாரம் கழித்து என்னை அழைத்துச் செல்லச் சந்திரனே வந்திருந்தான். வந்த மறுநாளே புறப்பட்டோம். கல்லூரியில் சேர்ந்தவுடன், விடுதியில் அவனுடைய அறைக்குப் பக்கத்தில் ஒரு அறை ஏற்பாடு செய்தான்.
கல்லூரியின் புதுவாழ்வில் பழகுவதற்கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. சந்திரன் அவ்வப்போது எனக்குத் துணையாக வந்து உதவினான். ஆனால் அவன் வகுப்பு வேறு, என் வகுப்பு வேறு; பாடங்களும் வேறு வேறு; ஆகையால் வாலாசாவில் இணைபிரியாமல் இருந்ததுபோல் அங்கே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளில் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்ததும் உண்டு. உணவுக்கூடத்திற்குச் செல்லும் வேளையில் ஒவ்வொரு நாள் என் அறையில் நுழைந்து குரல் கொடுத்து அழைத்துச் செல்வான். பெரும்பாலான நாட்களில் என்னை அழைக்காமலே சென்று விடுவான். நான் உணவுக் கூடத்திற்குச் செல்லும்போது அவனை அங்கே காண்பேன். "வேறு வேலை இருந்தது. நேரே வந்துவிட்டேன்" என்பான். சில நாட்களில் அவனை அறையிலும் காண முடிவதில்லை; உணவுக் கூடத்திலும் காண முடிவதில்லை. "எங்கே, காணோமே" என்பேன், "வேறு வேலை இருந்தது" என்பான். சில முறை இப்படி நேர்ந்த பிறகு, நான் கேட்பதும் குறைந்தது; அவனாகச் சொல்வதும் குறைந்தது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் படித்து ஒரே விடுதியில் தங்கியிருந்தும், நாளடைவில் எங்கள்