தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரே வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வாய்ப்பு இல்லாத குறையால், நட்பும் தேய்ந்து போகிறதே என்று வருந்தினேன்.
எனக்கு அவன்மேல் அன்பு குறையவில்லை; அடிக்கடி எண்ணினேன்; அடிக்கடி காண முயன்றேன்; அடுத்தடுத்துப் பழக முயன்றேன்; வாய்ப்பு இல்லாதபோது நான் என்ன செய்வேன்!
சென்னைக்கு வந்த முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன் என்னைக் கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போனான். கடற்கரை எனக்கு விருப்பமாக இருந்தது. பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்கு முன் நிற்க முடியாதவை என்பதை நன்கு உணர்ந்தேன். தவிர, அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என்னைக் கவர்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை; சில நாட்களில் சில வேலைகளில் என் உள்ளம் தனிமையை நாடினாலும், பெரிய திரளான மக்களுக்கு இடையில் இருக்கும்போது நான் ஒருவகைக் கிளர்ச்சியை பெற்று மகிழ்கிறேன். திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன்.
அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள் கழிந்த பிறகு அவர்களோடு செல்வதற்கும் தயங்கினேன். காரணம், முதலில் நான் யாரோடு சேர்ந்து சென்றேனோ அவர்களிடம் தீய பழக்கங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள் பெண்களைப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான பேச்சில் ஈடுபடுவதும், ஆசிரியர்களைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள்