"ஒரு வகையாக இருக்கிறது. நீதான் சொல்லித் தருவதில்லயே, உன்னை இங்கே பார்ப்பதே அரிதாக இருக்கிறதே" என்றேன்.
"எனக்கு எத்தனையோ வேலை!" என்று நேரே என் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துச் சொன்னான்.
"நாம் இங்கே வந்தது படிப்புக்காகத் தானே? வேறு கடமைகள் எதற்காக?"
"கல்லூரி என்றால் படிப்பு மட்டுமா?"
"அதுதான் முக்கியம். அது நல்லபடி முடிந்தால், ஓய்வு இருந்தால் மற்றவற்றை அளவாகக் கவனிக்கலாம்."
"ஓ! எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?"
"உன் நன்மைக்காகத்தானே சொல்கிறேன்?"
"என் நன்மையை நான் கவனித்துக் கொள்வேன், நீ உன் வேலையைப் பார்."
"மார்க்குக் குறைவாக வாங்கினாய் என்று சென்ற ஆண்டில் அப்பா வருத்தப்பட்டார்."
சந்திரன் பேசவில்லை. முகம் ஒரு வகையாகக் கலக்கம் உற்றது.
அவன் மனம் வருந்தியதை உணர்ந்தேன். அதற்குமேல் பேச என்னாலும் முடியவில்லை. அப்போது நிலவிய அந்த அமைதியை, "என்ன சந்திரன்! நாடகத்தில் பெண்ணாக நடிக்கப் போகிறாயாமே!" என்ற குரல் கலைத்தது. புகைபிடித்து வெளியிட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே நுழைந்தான்.
"இப்போது இவ்வளவு காலையில் என்ன நாடகத்தைப் பற்றி?" என்றான் சந்திரன்.