நான் இருந்த அறையைச் சுட்டிக்காட்டிச் சென்றேன். மாலனும் தன் அறை வலப்பக்கக் கோடி என்று முதல் மாடியைச் சுட்டிக்காட்டினான்.
மறுநாள் காலையில் சிற்றுண்டி முடிந்தபிறகு இருந்த ஓய்வு நேரத்தில் மாலனுடைய அறைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கமாக நடந்தேன். மாலன் ஏதோ எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டேன். படிப்பில் மிகுந்த அக்கறை உடையவன் என்று எண்ணினேன். நான் வந்து சன்னல் பக்கம் நின்றதையும் கவனிக்காமல் அவன் எழுதிக்கொண்டிருந்தான். கதவை விரலால் மெல்லத் தட்டினேன். எழுந்து வந்து திறந்து வரவேற்றான். "என்ன பாடம் எழுதுகிறாய்? நான் பார்க்கலாமா?" என்றேன்.
"இது வேறு. இதை ஏன் நீ பார்க்கவேண்டும்?" என்று அதை மறைக்கத் தொடங்கினான்.
"நீ நன்மை கருதித்தானே செய்கிறாய்? நானும் பார்த்தால் நல்லது. கற்றுக்கொள்வேன் அல்லவா?"
"இது பாடம் அல்ல. பாடமாக இருந்தால் காட்டுவேன்."
"சரி விருப்பம் இல்லாவிட்டால் வேண்டா சும்மா வந்தேன்" என்று உட்கார்ந்தேன்.
சிறிது நேரத்தில் மாலன் மனம் மாறி, "சரி பார். உனக்கு ஏன் வருத்தம்?" என்று காட்டினான்.
"எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே" என்று சொல்லிக்கொண்டே அதைப்பார்த்தேன். ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லி, அவருடைய பெயரைப் பதினேழு முறை வாழ்த்தியிருந்தது. அதன் கீழே இதைப் பார்ப்பவர்கள் இதைப் போல் ஐந்து எழுதித் தமக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வாறு இருபத்துநான்கு மணிநேரத்தில் தபாலில் அனுப்பிவைத்தால் இந்த ரிஷிகுல வட்டத்துக்கு உதவிசெய்த புண்ணியம் உண்டாகும் என்றும், அதனால் எண்ணிய காரியம் கைகூடும் என்றும் குறித்திருந்தது. அவ்வாறு செய்யத் தவறுகிறவர்களை இந்த வட்டத்தை நிறுத்திய பாவம் சேரும் என்றும், அவர்களுக்கு இரண்டு நாட்களில், அல்லது இரண்டு வாரத்தில், அல்லது இரண்டு மாதத்தில் தீமை ஏற்படும் என்றும் தொடர்ந்து குறித்திருந்தது. இந்தக் குறிப்புக்களையும் வாழ்த்துக்களோடு சேர்த்து அனுப்பவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அதைப் படித்தவுடனே கிழித்துப்போடவேண்டும்