என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவ்வாறு செய்யாமல், "இதை உனக்கு அனுப்பியவர் யார்?" என்று கேட்டேன்.
"யாரோ தெரியாது. பெயர் எழுதத் தேவை இல்லை."
"கவலைப்படாதே. கிழித்துப்போடு. உனக்கு ஏன் இந்த மூடநம்பிக்கை?"
"அய்யோ! அப்படிச் சொல்லாதே யார் கண்டார்கள்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?"
நான் சிரித்தேன் "இப்படி ரிஷி தன் பெயரால் ஒரு வட்டம் ஏற்படுத்த விரும்புவாரா? அதற்காக இப்படி அவாவும் அச்சமும் ஊட்டி மருட்டுவாரா? அப்படி மிரட்டி நம்மிடம் வேலை வாங்குகிறவர் உத்தமராக இருக்கமுடியுமா? அவர் சொன்னபடி சாபம் பலிக்குமா? வெறும் பித்தலாட்டம்."
மாலன் உண்மையாகவே பயந்து போனான். "அப்படிப் பழிக்கவே கூடாது. பெரிய தவறு அது. உனக்குத் தெரியாது" என்றான்.
"எப்படியாவது போ. எனக்கு ஒன்றும் அனுப்பி விடாதே. ஒருவேளை அனுப்பினாலும் நான் கிழித்துத்தான் போடுவேன். அதற்கு மதிப்புக் கொடுக்கவேமாட்டேன்."
மாலன் என் வாய்மேல் கைவைத்துத் தடுத்து, "பழிக்க வேண்டா" என்று கேட்டுக்கொண்டான்.
"இதனால் என்ன நன்மை எதிர்பார்க்கிறாய்?"
"நமக்கு இப்போது வேண்டியது என்ன? தேர்வில் வெற்றி, நல்ல எண்கள், அறிவுவளர்ச்சி; இவைகள்தான்."
"இவைகளுக்காக இப்படிக் காலத்தை வீணாக்குவதைவிடப் பாடங்களையே படித்து எழுதுவது நல்லதல்லவா!" என்றேன்.
"உனக்கு தெரியாது. நான் எஸ். எஸ். எல். சி படிக்கும் போது இப்படி இரண்டு வந்தன. நான்