தவறாமல் எழுதி அனுப்பினேன். என்னுடன் படித்தவன் ஒருவன் உன்னைப்போல் பழித்து பேசிக் கைவிட்டான். அவன் என்ன ஆனான் தெரியுமா? தேர்வில் வெற்றிபெறவில்லை."
"படித்திருக்கமாட்டான்; அதனால் வெற்றி பெறவில்லை."
"சரி. உன் விருப்பம். இந்தப் பேச்சை விட்டுவிடு" என்று வேறு பேச்சுத் தொடங்கினான். "நீ என்ன குறிப்புகள் படிக்கிறாய்? யாருடைய உரை வாங்கினாய்?" என்று கேட்டான்.
"இன்னும் வாங்கவில்லை."
"அப்படியானால் பாடப் புத்தகங்களையா படித்துக்கொண்டிருக்கிறாய்?"
"ஆமாம்."
"உனக்கு யாரும் சொல்லவில்லையா?"
"எதைப்பற்றி?"
"பாடப் புத்தகங்களை ஒரு மூலையில் வைத்துவிட்டு குறிப்புகள் வாங்கி படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியுமாம்."
"குறுக்குவழி இது."
"ஓ ஓ! நாம் என்ன இப்போது நேர் வழியிலா படிக்கிறோம்! நமக்கு ஆசிரியர்கள் நேர் வழியிலா கற்றுக் கொடுக்கிறார்கள்? ஆங்கில நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே விஞ்ஞானம் வரலாறு முதலான பாடங்களைக் கற்பிக்கிறார்கள். அதை அப்படியே இங்கே கண்மூடிப் பின்பற்றுகிறார்கள். நம் மூளைக்கு நேர்வழி தமிழ். அதைவிட்டு ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தானே கற்றுக் கொடுக்கிறார்கள்? இப்படிக் கற்பிக்கும் வழி தவறாக இருக்கும்போது, நாம் கற்கும் வழியும் தவறாகத்தான் இருக்கும். ஆகையால் குறுக்கு வழிப்பயிற்சி தான் வெற்றி பெறும்" என்று அலமாரியைத் திறந்து தன்னிடம் இருந்த